Sunday, 23 February 2014

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும் முடிவு : பாரதிராஜா பேச்சு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட மேலும் 4 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.
ஆனால், மத்திய அரசின் எதிர் நடவடிக்கை காரணமாக, அவர்களுடைய விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் டைரக்டர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் டைரக்டர் பாரதிராஜா பேசியபோது,   ‘’உலக நாடுகள் அனைத்தும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள்’’என்று பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, ‘‘தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதலமைச்சர் ஜெயலலி தாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும்’’ என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் பேசும்போது, ‘‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், மனித நேயத்துடன் முடிவெடுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதல்–அமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment