Thursday, 6 February 2014

சாதி அடிப்படை இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: காங். செயலாளர் திவேதி மன்னிப்பு கேட்க வேண்டும் - ராமதாஸ் அறிக்

சென்னை, பிப். 6–

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தற்போதைய இடஒதுக்கீட்டு முறையில் தகுதியில்லாதவர்கள் தான் அதிகம் பயனடைவதாகவும் கூறியிருக்கிறார்.

சமூக நீதி அமைப்பையே கொச்சைப்படுத்தும் வகையில் திவேதி கூறியுள்ள கருத்துக்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. சமூகநீதி என்பது சாதி சார்ந்ததாக மாறி வருகிறது என்றும் திவேதி கூறியிருக்கிறார். சமூகநீதி சாதி சார்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. சமூக நீதியை சமூகத்தின் ஓர் அங்கமான சாதியின் அடிப்படையில் தான் வழங்க முடியும். அதனால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16 (4)–வது பிரிவில், ‘‘சமூக நீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தடை இல்லை’’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை இந்திய அரசியல் சட்டமும் ஏற்றுக் கொள்ளவில்லை; உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் மன்றத்திலும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு இல்லை. வருமான சான்றிதழ்களை பணம் கொடுத்து வாங்குவது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறை சாத்தியமானதும் இல்லை.

உண்மையும், நடைமுறையும் இவ்வாறு இருக்கும் போது, ஆளும் காங்கிரசின் முன்னணித் தலைவரான ஜனார்தன் திவேதி போன்றவர்கள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறுவது சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் செயலாகும். திவேதியின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிகின்றன. திவேதியின் யோசனையை ஏற்கப் போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மத்திய அரசும் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. எனினும் சமூக நீதிக்கு எதிராக தெரிவித்த கருத்துக்காக திவேதி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment