Wednesday, 4 March 2015

டாக்டரின் ஆலோசனைப்படி மாஸ்க் அணியலாம்: பன்றிக்காய்ச்சல் பாதித்த மாணவர்களுக்கு தனி தேர்வு மையம்

சென்னை, மார்ச்.4–
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு நாளை தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கு மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போதிய வெளிச்சம், காற்றோட்டம், மின்விளக்கு, மின்விசிறி வசதி, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சீபுரம், கோவை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கும் இந்நோய் பரவி உள்ளதால் பள்ளிகள் தகுந்த முன்னெச்சரிச்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலே குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் ஒரு சில தனியார் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குரிய குழந்தைகள் பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களாக இருந்தால் அவர்களுக்கு தனி தேர்வு மையம் அமைக்கவும் அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் கூறியதாவது:–
பொதுத்தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்கள் தனியாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனி தேர்வு கூடங்கள் அமைக்கப்படும்.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புள்ள மாணவ–மாணவிகள் மற்றவர்களுடன் சேர்ந்து தேர்வு எழுதாமல் தனியாக தேர்வு எழுத வேண்டும். அதற்கான வழிமுறைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும். டாக்டரின் ஆலோசனைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
முகத்தில் ‘மாஸ்க்’ அணிந்து தேர்வு எழுதலாம் என்று டாக்டர் அறிவுறுத்தி இருந்தால் அதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். இதுபற்றி பள்ளிகளுக்கும், தேர்வு மையங்களில் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் பிற மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தனி அறை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment