சென்னை, மார்ச். 23–
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் 3 தடுப்பணைகள் கட்ட ஏற்பாடு செய்து வருகிறது.
இதை கண்டித்து பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிராகவும், அதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:–
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி, அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவில்லை. இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறி விடும். இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக மக்களின் ஒட்டு மொத்த பிரச்சினை. இதை யாரும் அரசியல் ஆக்க கூடாது.
உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை டெல்லி அழைத்துச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. உடனே ஒரு மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வேண்டும். இதை செய்யாத தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.
அவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. பெங்களூர் வழக்கில் மூழ்கி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல் காரணங்களால் எல்லா கட்சிகளும் ஒன்றுபடுவதில்லை.
இந்த கலாசாரம் மாற வேண்டும். இதில் கவுரவம் பார்க்க கூடாது. வருகிற 28–ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழக மக்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். 2016–ல் பா.ம.க. ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது உறுதி. அப்போது அரசியலிலும், அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. துணை தலைவர்கள் கே.என். சேகர், ஈகை தயாளன், மாவட்ட அமைப்பாளர் மு.ஜெயராமன், இளைஞர் அணி மாம்பலம் வினோத் நாடார், மாவட்ட செயலாளர்கள் ராம.கன்னியப்பன், ஏழுமலை, வெங்கடேசன், கோயம்பேடு பாண்டியன், சீமான் இளங்கோவன், நிர்வாகிகள் முத்துக்குமார், ஜி.வி.சுப்பிரமணியன், மேகநாதன், மொசைக்ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment