Saturday, 28 March 2015

புதுவை முன்னாள் முதல்–அமைச்சர் உதவியாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை

புதுச்சேரி, மார்ச் 28–
புதுவை வெங்கட்டா நகர் 4–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 77). இவர் வைத்திலிங்கம் முதல்–அமைச்சராக இருந்தபோது அவரது தனி செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பிரேமா (70). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கிருஷ்ணசாமியும், அவரது மனைவி பிரேமாவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது டிப்–டாப் உடை அணிந்து கையில் லேப்–டாப்புடன் கூடிய ஹேன்பேக்குடன் கிருஷ்ணசாமியின் வீட்டு கதவை தட்டினர். கிருஷ்ணசாமி கதவை திறந்து அந்த வாலிபரிடம் என்ன என்று கேட்டபோது ஆதார் அட்டையை சரிபார்க்க வந்ததாக அந்த ஆசாமி கூறினார்.
கிருஷ்ணசாமியும் அந்த வாலிபரை வீட்டின் வரவேற்பு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு கிருஷ்ணசாமி மற்றும் அவரது மனைவி பிரேமாவும் குடும்ப விபரங்களை அந்த வாலிபர் கேட்டுக்கொண்டே வந்தார். குடும்பத்தின் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த ஆசாமி ஆதார் அட்டைகளை கொண்டு வந்து காண்பிக்கும்படி கேட்டார்.
இதையடுத்து பிரேமா பீரோவில் வைத்திருந்த ஆதார் அட்டையை எடுத்து வந்தார். ஞாபக மறதியில் சாவியை பீரோவிலேயே பிரேமா வைத்து விட்டார். இதனை கவனித்து விட்ட அந்த டிப்–டாப் ஆசாமி அவர்களை திசை திருப்பும் நோக்கில் இறங்கினான். வீட்டை அழகாக வைத்து இருக்கிறீர்களே எப்படி உங்களால் முடிகிறது என்று பாசமாக கேட்டான். தனது வீட்டையும் இதுபோன்று வைத்துக்கொள்ள ஆசையாக உள்ளது என்று பேசி வீட்டை சுற்றி காண்பிக்கும்படி அந்த ஆசாமி கூறினார்.
வீட்டின் ஒவ்வொரு அறையாக சுற்றி பார்த்த அந்த ஆசாமி கடைசியாக சமையல் அறையை காண்பிக்கும்படி கூறினான். சமையல் அறைக்கு அழைத்து சென்று அங்கு களைப்பாக இருக்கிறது என்று கூறி வரவேற்பு அறையில் அமர்ந்திருப்பதாகவும் அதனால் மோர் தயார் செய்து தரும்படி கேட்டான்.
டிப்–டாப் ஆசாமி கனிவாக பேசியதால் அதனை நம்பி கணவன்–மனைவி இருவரும் மோர் தயார் செய்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த வாலிபர் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினான்.
சிறிது நேரம் கழித்து கணவன்–மனைவி இருவரும் மோருடன் வந்து பார்த்தபோது டிப்–டாப் ஆசாமியை காணாமல் திடுக்கிட்டனர். பின்னர் சந்தேகம் அடைந்து பீரோவை திறந்து பார்த்தபோது நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் கிருஷ்ணனும்–பிரேமாவும் தனியாக இருப்பதை பல நாட்களாக நோட்டமிட்டு டிப்–டாப் ஆசாமி நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து டிப்–டாப் ஆசாமியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

காவிரி பிரச்சனை விவகாரம்: கர்நாடக அரசை கலைக்க வேண்டும்-வெள்ளையன் பேட்டி

நெல்லை, மார்ச் 28–காவிரி பிரச்சனை விவகாரம்: கர்நாடக அரசை கலைக்க வேண்டும்-வெள்ளையன் பேட்டி
பாளையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. அண்டை மாநிலங்கள் இவ்வாறு செயல்பட்டால் ஒருமைப்பாடு சீர்குலையும். நாட்டில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
எல்லா துறைகளிலும் அந்நிய ஆதிக்கத்தை மத்திய அரசு புகுத்தி வருகிறது. அண்டை மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. காவிரி பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல. மக்களின் வாழ்வாதாரம், குடிநீர் பிரச்சனையும்கூட. கர்நாடக அரசு திருந்தவில்லையென்றால் அந்த அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எங்கள் போராட்டம் தீவிரமடையும்.
மே 5–ந்தேதி தஞ்சாவூரில் எங்கள் சங்கத்தின் மாநாடு நடக்கிறது. அதில் போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு, மார்ச் 28–
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையையெட்டி உள்ளது. இங்குள்ள பழைய புறநோயாளிகள் பிரிவு அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரது தோள்பட்டையிலும் தலையிலும் அரிவாள் வெட்டு காயம் உள்ளது. மேலும் தலையில் கல்லை போட்டு கொடூரமாக தாக்கி உள்ளனர்.
சிவப்பு நிறம் கொண்ட அவர் கருப்பு நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டிசர்ட் அணிந்திருந்தான். அவன் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை. வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு டவுண் இன்ஸ்பெக்டர் சரவணன் போலீசாருடன் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினார்.
புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் பழைய கட்டிடம் அருகே ஆள் நடமாட்டம் குறைந்தது. இந்த இடத்தில் வாடகை கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். ஆனால் கார்கள் நிற்பதற்கு அனுமதி கிடையாது என்றாலும் டிரைவர்கள் இங்குதான் கார்களை நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதனால் யார் வருகிறார்கள் என்பது தெரியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மகளை பிரசவத்திற்காக அழைத்து வந்த 60 வயது முதியவர் செவிலியர் விடுதி அருகே கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: பா.ஜனதா பெண் கவுன்சிலர் கைது

கோவை, மார்ச் 28–
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் ஜிம் ஆறுமுகம் (வயது 50) ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவருக்கும் கோவை மாநகராட்சி 1–வது வார்டு பா.ஜனதா கவுன்சிலருமான வத்சலாவின் கணவர் வரதராஜூவுக்கும் தொழில்போட்டி ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது.ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: பா.ஜனதா பெண் கவுன்சிலர் கைது
அது பற்றி பேச வரதராஜன் வீட்டுக்கு ஆறுமுகம் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆறுமுகம் வரதராஜின் மனைவியான வத்சலாவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறுப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வரதராஜ், வத்சலா, உதவியாளர் இளங்கோ ஆகியோர் ஆறுமுகத்தை தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் இளங்கோவனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆட்டோ குமார், செந்தில் என்ற செந்தில்குமார், கனகு என்ற கனகராஜ் ஆகியோர் ஆறுமுகத்தை தாக்கியதாக தெரியவந்தது.
இந்நிலையில் துடியலூர் போலீசில் மணிகண்டன் என்பவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி சரணடைந்தார். இதனிடையே கவுன்சிலர் வத்சலா, செந்தில்குமார், கனகராஜ் ஆகியோரை கணபதி பஸ் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கவுன்சிலரின் கணவர் வரதராஜ், ஆட்டோ குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்
பெண் கவுன்சிலர் வத்சலாவிடம் ரியல் எஸ்டேட் அதிபர் தவறாக நடக்க முயன்றபோது கொலை செய்தோம் என்று கூறினர்.

திருச்செங்கோட்டில் பிளஸ்–1 மாணவி கொலை: கைதான 3 பேரும் ஜெயிலில் அடைப்பு

திருச்செங்கோடு, மார்ச் 28–

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரியமணலி அருகே உள்ள கோட்டப்பாளையம் முன்சிப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 16). பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்த இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான கொட்டகையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருந்தது. மாணவியின் சைக்கிள் அந்த கொட்டகை அருகே கிடந்தது.

இந்த கொலை தொடர்பாக எலச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ரிக் தொழிலாளி சிவா என்ற திலீப்குமார் (22), அவரது நண்பர் சந்தோஷ்குமார் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 17 வயது மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

ஒருதலை காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கைதான திலீப்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 120பி,201, 302, 6 (எல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாணவி கொலையில் கைதான திலீப்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:–

நான் திருச்செங்கோட்டில் ரிக் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். நானும், ஸ்ரீஜாவும் உறவினர்கள். நான் அவளை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நான் அவளிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டேன். ஆனால் அவள் மறுத்து விட்டாள். இதனால் விரக்தி அடைந்த நான் ஏற்கனவே 2 முறை விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்.

மேலும் அவள் என்னிடம் பழகுவதையும், பேசுவதையும் குறைத்துக்கொண்டாள். அவள் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவருடன் பழகி வந்தது எனக்கு தெரியவந்தது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த நான், வேறு ஒருவருடன் பழகுகிறாயா? என்று கூறி அவளை கண்டித்தேன். ஆனாலும் அவள் அந்த மாணவருடன் பேசி, பழகுவதை கைவிடவில்லை.

சம்பவத்தன்று ஸ்ரீஜா பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள காலி குடிசை வீட்டில் சக மாணவரிடம் பேசி கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் அவளிடம் சென்று இந்த இடத்திற்கு எதற்கு வந்தாய்? என கேட்டேன். மேலும் நீ என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறாயே? என்று கேட்டேன். இது தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அவளுடன் பழகி வரும் அந்த மாணவரும் அங்கு இருந்தார். அவருடன் எனக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நான் போன் செய்து எனது நண்பர் துஞ்சாம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரை அங்கு வரவழைத்தேன்.
திருச்செங்கோட்டில் பிளஸ்–1 மாணவி கொலை: கைதான 3 பேரும் ஜெயிலில் அடைப்பு
பின்னர் மாணவி ஸ்ரீஜாவின் துப்பட்டாவை எடுத்து, அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். பின்னர் அவளது பிணத்தை சாக்குமூட்டையில் திணித்து விட்டு அங்கிருந்து நாங்கள் வந்து விட்டோம்.

இவ்வாறு போலீசாரிடம் திலீப்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

மாணவியின் பள்ளி சீருடை கிழிக்கப்பட்டு இருந்ததால், அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் சங்கீதா, கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்து முதற்கட்ட அறிக்கையை போலீசாருக்கு அளித்துள்ளனர். அதில் மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைதான திலீப்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கிளைச் சிறையிலும் கொலையை மறைத்ததாக கைதான மாணவர் சேலம் சிறுவர் சீர்திருத்த சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Wednesday, 25 March 2015

ரூ.1 கோடி போதை பொருள் கடத்தல்: என்ஜினீயர் கைது

சென்னை, மார்ச் 25–
சென்னையில் குற்ற செயல்களை தடுக்க போலீசாரின் இரவு ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், இணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் தேவராஜ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ரத்னவேல் பாண்டியன் ஆகியோர் அடங்கிய போலீசார் புழல் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் சிக்கினார். மோட்டார் சைக்கிளில் வந்த அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹெராயின், பிரவுன்சுகர், கேட்டமின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 3 கிலோ எடையுள்ள இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
பிடிபட்ட சாமிநாதன், என்ஜினீயரிங் பட்டதாரி அவரது பெற்றோர் இருவரும் அரசு ஊழியர்கள். குறுகிய காலத்தில் பணக்காரராக பில்லா–2 சினிமா படத்தை பார்த்து போதை பொருள் கடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு அந்தமானை சேர்ந்த தக்காளி ராஜா என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வேப்பம்பட்டில் தங்கி இருந்த கூட்டாளி தக்காளி ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகிறார்கள்.

தமிழக பட்ஜெட் தாக்கல்: புதிய வரிகள் இல்லை - செல்போன் வரி குறைப்பு

சென்னை, மார்ச். 25–

தமிழக சட்டசபையில் 2015–2016–க்கான பட்ஜெட்டை முதல்– அமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

புதிய பட்ஜெட்டில் வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

நிதிச்சுமை உயர்ந்துள்ள இந்த நிலையிலும் மாநிலத்தின் சொந்த வரிவருவாயில் குறைந்த வளர்ச்சியே உள்ள போதும், புரட்சித் தலைவி அம்மாவின் வழிகாட்டுதலின்படி புதிய வரிகள் எதனையும் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன், உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக சில முக்கிய வரிச் சலுகைகளை வழங்கவும் இந்த அரசு முன் வந்துள்ளது. இதன்படி பின்வரும் வரிவிகித மாற்றங்களை நமது அரசு செயல்படுத்தும்.

* பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையை தவிர) உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி விலக்கிக் கொள்ளப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களில் உள்ள உற்பத்தி அலகுகளோடு சிறப்பாகப் போட்டியிட ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் 2006 பிரிவு 19 (2) (வி)ன் கீழ் கொண்டுவரப்பட்ட காப்புரையின்படி 11.11.2013 முதல் விதிக்கப்பட்ட 3 சதவீத உள்ளீட்டு வரி திருப்பம் திரும்பப் பெறப்படும்.

* ‘சி’ படிவமின்றி நடைபெறும், மாநிலங்களுக்கு இடையேயான பொருள் விற்பனைகளிலும் உள்ளீட்டு வரி வரவை வணிகர்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக, 2006–ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் பிரிவு 19(5)–ன் கீழ்வரும் கூறான (சி)–ஆனது இனிமேல் விலக்கிக் கொள்ளப்படும். இந்த நடவடிக்கையினால் ‘சி’ படிவமின்றி பொருட்களின் மீதான மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையினை மேற்கொள்ளும் வணிகர்களது கூடுதல் சுமை தவிர்க்கப்படும்.

* மீன்பிடி கயிறுகள், மீன்பிடி மிதவைகள், மீன்வலை முறுக்கு நூல், மீன்பிடி விளக்குகள் மற்றும் மீன்பிடி திருப்புகை போன்ற மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப் பொருட்கள் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.

* அனைத்து வகையான கொசு வலைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.

* நெய்தலுக்கு முன்பாக நூலுக்கு பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

* ஏலக்காய் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.

* மின்சேமிப்புக்கான கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, அனைத்து வகையான ஒளி உமிழ் டையோடு விளக்குகள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

* மாநிலத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு நன்மை பயக்கவும், காற்றழுத்த கருவிகள், 10 குதிரைத்திறன் வரையிலான மோட்டார் பம்புகள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

* கைபேசிகள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

மேற்காணும் வரிச்சலுகைகள் மூலமாக அரசிற்கு ஆண்டொன்றுக்கு 650 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

மேற்கூறிய அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு 2015–2016 ஆண்டிற்கான வருவாய் வரவு மதிப்பீடுகளை பேரவையின் முன் வைக்கிறேன். வணிகவரி வசூல் 2015–2016–ம் ஆண்டிற்கு 72,068.40 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்றே, முத்திரைத் தாள் மற்றும் பத்திரப்பதிவின் மூலம் கிடைக்கும் வருவாய் 10,385.29 கோடி ரூபாய் அளவிலும், ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய் 7,296.66 கோடி ரூபாய் அளவிலும், வாகனங்கள் மீதான வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 4,882.53 கோடி ரூபாய் அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, 2014– 2015–ம் ஆண்டு கணிக்கப்பட்டுள்ள அளவை விட 12.02 சதவீத அளவில் மட்டுமே வரி வருவாய் வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளதால், வரும் நிதியாண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 96,083.14 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 21,149.89 கோடி ரூபாய் எனவும், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் மானிய உதவி 16,376.79 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு 2015–2016–ம் ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவுகள் 1,42,681.33 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக வரிகள் எவற்றையும் உயர்த்தாமல், நிர்வாகத் திறனை மேம்படுத்தியும், வரி வசூல் அமைப்பை முடுக்கிவிட்டும் மேற்கூறிய வருவாய் இலக்குகளை இந்த அரசு எட்டும்.

செல்போன்கள் விலை ரூ.1000 வரை குறையும்: வாட் வரி குறைப்பால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை, மார்ச் 25–
செல்போன்கள் மீது தமிழக அரசு 14.5 சதவீதம் மதிப்புக்கூட்டு வரியை விதித்துள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தடவை செல்போன் வாங்கும்போது, சில நூறு ரூபாயை மதிப்புக்கூட்டு வரியாக செலுத்த வேண்டியுள்ளது. இது செல்போன்களின் மொத்த விலையை அதிகரிக்க செய்து விடுகிறது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஏழை–எளிய மக்களும் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக நவீன வசதிகள் கொண்ட செல்போன்கள் மீது மக்களுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் மதிப்புக்கூட்டு வரி விதிப்பால் ஏழைகள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே ஏழை–எளியவர்களும் நவீன செல்போன்களை வாங்கி பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் செல்போன்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளது.
அதாவது தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 9.5 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் செல்போன்கள் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களின் விலை சுமார் ரூ.1000 வரை குறையும் என்று தெரிய வந்துள்ளது.
செல்போன் விலை குறையும் என்ற தகவலால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது போல செல்போன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் செல்போன் விற்பனையில் முதன்மை இடத்தில் இருக்கும் பிரியதர்ஷினி நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஜி.சுரேஷ்குமார் கூறுகையில், ‘‘செல்போன் மீதான மதிப்புக்கூட்டு வரி குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம். இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் நிறைய பேர் பலன் அடைவார்கள். தரம் உயர்ந்த செல்போன்களை எல்லாரும் வாங்கும் நிலை உருவாகும். இதனால் செல்போன்களின் மொத்த விற்பனையும் உயரும்’’ என்றார்.

நேரு ஸ்டேடியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய விளையாட்டு வளாகம்

சென்னை, மார்ச் 25-நேரு ஸ்டேடியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய விளையாட்டு வளாகம்
முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த அரசு விரிவுபடுத்தியுள்ளது. 2015–2016 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில் இலங்கைத் தமிழர் நலனுக்காக 108.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் அரசு அலுவலர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 504.81 கோடி ரூபாய் அளவில் 1,26,462 அலுவலர்கள் பயன்பெற்றுள்ளனர். நமது மாநிலத்தில் 7 லட்சம் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் உள்ளனர்.
அரசு அலுவலகர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் போன்றே, ஓய்வூதியர்களுக்கான சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தையும் இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை 87.23 கோடி ரூபாய் செலவில் 29,978 ஓய்வூதியர்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றுள்ளனர். 2015–2016 ஆம் அண்டு வரவு–செலவுத் திட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக 18,668 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மாற்றுத் திறனாளிகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த மறுவாழ்வுத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடும் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்படும் மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகையை 1,500 ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 12 கோடி ரூபாய் செலவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த ரூ.364 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

புரசைவாக்கத்தில் தொழில் உரிமம் புதுப்பிக்க திரண்ட வியாபாரிகள் முகாமை வெள்ளையன் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச். 25–
சென்னை மாநகராட்சியில் புரசைவாக்கம் 103 மற்றும் 104–ம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் தொழில் உரிமம் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் இன்று நடந்தது.
புரசைவாக்கம் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடந்த முகாமுக்கு மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் பானுசந்திரன், ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் தொழில் உரிமங்களை புதுப்பிக்க ஒரே நேரத்தில் 500 வியாபாரிகள் அங்கு திரண்டனர்.
அவர்களுக்கு 2015–2016–ம் ஆண்டுக்கான தொழில் உரிமம் புதுப்பித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், புரசைவாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.நாகபூஷணம், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ஹரிகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் பி.எல்.செல்வம், கே.மணி, கோபிநாதன், பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்புரசைவாக்கத்தில் தொழில் உரிமம் புதுப்பிக்க திரண்ட வியாபாரிகள் முகாமை வெள்ளையன் தொடங்கி வைத்தார். முகாம் இன்று மாலை வரை நடக்கிறது

சைதாப்பேட்டை மாணவர் விடுதி விழாவில் பங்கேற்க திருமாவளவனுக்கு போலீஸ் தடை

சென்னை, மார்ச். 25–
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி ஆண்டு விழா நேற்று நடை பெறுவதாக இருந்தது. இதில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
விழாவில் கலந்து கொள்ள அவர் வேளச்சேரியில் இருந்து புறப்பட தயாரானார். அதற்குள் போலீஸ் அதிகாரிகள் அவரை சந்தித்து விடுதி விழாவில் தாங்கள் பங்கேற்க கூடாது. விடுதிக்கு வெளியே வேண்டுமானால் நிகழ்ச்சியை நடத்தி கொள்ளுங்கள் என்று கூறினர்.
போலீஸ் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து எழுத்துப் பூர்வமாக அனுமதி மறுப்பு ஆணை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ரத்து செய்தார். ஆனாலும் இந்த பிரச்சினை தொண்டர்கள், விடுதி மாணவர்கள் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கோர்ட்டு அனுமதிப் பெற்று விழாவில் கலந்து கொள்வது என திருமாவளவன் முடிவு செய்தார்.
விடுதி விழாவில் பங்கேற்க கூடாது என போலீஸ் தனக்கு தடை விதித்து இருப்பதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாணவர் விடுதியில் நேற்று நடைபெறுவதாக இருந்த ஆண்டு விழாவில் நான் பங்கேற்கக்கூடாது என திடீரென அரசு தடை விதித்துள்ளது. நூற்றுக் கணக்கான காவலர்களை இறக்கி விடுதி மாணவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது காவல்துறை.
அத்துடன், வேளச்சேரியில் நான் தங்கியுள்ள அலுவலகத்தைச் சுற்றிலும் நூற்றுகணக்கான காவல் துறையினரை இறக்கி வெளியில் செல்ல விடாமல் முற்றுகையிட்டனர். காவல் துறையின் உயர் அதிகாரிகள் நேரிலே வந்து அவ்விழாவில் பங்கேற்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக அனுமதி மறுப்பு ஆணை வழங்கினர்.
மாணவர்கள் விடுதியில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என ஆதிதிராவிட நலத்துறையைச் சோர்ந்த அதிகாரிகள் காவல் துறைக்கு அறிவிப்புச் செய்ததையடுத்து இவ்வாறு தடைவிதிக்கப்பட்டதாக கூறினார்கள்.
அரசியல் கட்சித் தலைவர்கள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள், விடுதிகளின் ஆண்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கமான நடைமுறையே ஆகும். விக்டோரியா மாணவர் விடுதியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆளுங்கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டுள்ளனர். ஆளுங்கட்சியினர் பங்கேற்பதற்கு தடைவிதிக்காத அரசு, அல்லது காவல்துறை எனக்கு மட்டும் தடைவிதித்திருப்பது அரசியல் காழ்ப்புணர்வே காரணமாகும்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் கொடூரமான செயலாகும்.
10–ந்தேதி வில்லிவாக்கம் விடுதி ஆண்டு விழாவிலும், 18–ந்தேதி கோடம்பாக்கம் விடுதி ஆண்டு விழாவிலும், 23–ந்தேதி ராயபுரம் முதுகலை மாணவர் விடுதி ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றினேன். மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் அவ்விழாக்கள் நடந்தேறின. எம்.சி.ராசா விடுதியின் பழைய மாணவர் என்கிற முறையில் எனக்கு மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அதில் பங்கேற்க ஒப்புதல் அளித்தேன். ஆனால், அரசு இதற்குத் தடைவிதித்திருப்பது இதற்கு முன் யாருக்கும் நடந்திராத நிகழ்வாகும்.
அரசின் இந்த ஓரவஞ்சனைப் போக்கையும் மாணவர்களின் உரிமையைப் பறித்த அடக்குமுறையையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்

தாலி அறுக்கும் போராட்டம் அறிவிப்பு: கி.வீரமணி மீது போலீசில் புகார்

சென்னை, மார்ச். 25–
இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத் பிரிவு) மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இந்து மதத்துக்கு எதிராக பேசி இந்துகளின் மத உணர்வை புண்படுத்தி உள்ளார்.
இந்து பெண்கள் புனிதமாக மதிக்கும் மங்களகரமான தாலியை கொச்சைபடுத்தும் விதத்தில் பெண்களுக்கு தாலி தேவையில்லை என்று பேசி உள்ளார்.
தாலியை அவமதிக்கும் வகையில் ஏப்ரல் 14–ந்தேதி அன்று பெரியார் திடலில் தாலி அறுப்பு போராட்டம் நடைபெறும் என்றும் கூறி உள்ளார்.
இந்துக்கள் தாயைவிட உயர்வாக மதிக்கும் பசு மாட்டின் கறியை சமைத்து சாப்பிடும் போராட்டம் நடைபெறும் என்றும் கூறி இருக்கிறார்.
இது தேவையில்லாதது. இந்த போராட்டங்கள் வீண் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளதுதாலி அறுக்கும் போராட்டம் அறிவிப்பு: கி.வீரமணி மீது போலீசில் புகார்

சென்னை மாநகர வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.500 கோடி - மழை நீர்வடிகால் பணிக்கு ரூ.152 கோடி

சென்னை, மார்ச் 25-
விரைவான நகரமயமாதலால், மாறி வரும் மக்கள் தொகை பரவலுக்கு ஏற்ப நகர்ப்புறக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது. இச்சவாலை சமாளிக்க, கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டங்களின் கீழ் 1,434.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1,084 குடிநீர் வழங்கல் திட்டங்களும், 862.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 74 பாதாளச் சாக்கடைத் திட்டங்களும் 1,929.16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3,304 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2015–16ம் ஆண்டில் சென்னை மாநகர வளர்ச்சித் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு 750 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திற்காக 2015–16ம் ஆண்டிற்கு 420.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளையும் திறன்மிகு நகரங்கள் திட்டத்தில் சேர்ப்பதற்கான மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி, இந்த அரசு 2015–16ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள அனைத்து நகரங்களிலும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள தேசிய நகர்ப்புற வளர்ச்சி இயக்கத்திற்காக 2015–16ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய நகரங்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், காஞ்சீபுரத்தையும், வேளாங்கண்ணியையும் சேர்த்துள்ளமைக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாரம்பரிய நகர மேலாண்மைத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக, இந்த வரவு – செலவுத் திட்டத்தில் 46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2,212.89 கோடி ரூபாய் மொத்த தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியில், 1,101.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பெரும் மழைநீர் வடிகால் பணியும் இத்திட்டத்தில் அடங்கும். 2015–16ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 152 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. வெளிநடப்பு செய்தது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தார்.
அதன் பிறகு 27–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
இந்த கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதமும், பதில் உரையும் இடம் பெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இந்த தொடரில் இல்லை. அடுத்த அலுவல் ஆய்வு குழுகூடி விவாதம்தமிழக சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு நடத்துவது பற்றி முடிவு செய்யும்

தமிழக பட்ஜெட்: காவல் துறைக்கு ரூ.5569 கோடி

2010–2011–ம் ஆண்டில் 3,184.47 கோடி ரூபாயாக இருந்த காவல்துறைக்கான ஒதுக்கீடு தொடர்ந்து உயர்த்தப்பட்டு, முன் எப்போதும் இல்லாத அளவில் 2015–2016–ம் ஆண்டு வரவு–செலவுத்திட்டத்தில் 5,568.81 கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் துறைக்கான கட்டடங்களை கட்டுவதற்காக 2,216.99 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015–2016–ம் ஆண்டு வரவு–செலவு திட்டத்தில் கட்டடங்கள் கட்டுவதற்காக 538.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை நவீனப்படுத்துவதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் 73.23 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களை தொடங்கவும், 66 புதிய தீயணைப்பு வண்டிகள் வாங்கவும், மூன்று புதிய வான் தூக்கிகள் வாங்கவும் இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக இத்துறை 541 உயிர்களை காப்பாற்றவும், 1,613.49 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேதமடைவதில் இருந்து தடுத்து பாதுகாக்கவும் முடிந்தது.

துரிதமாக செயலாற்றும் துணிவுமிக்க நவீன படையாக இத்துறை மாற்றம் அடைந்துள்ளதை, அண்மையில் மவுலிவாக்கத்தில் நிகழ்ந்த கட்டட விபத்து மீட்பு பணிகள் நிரூபித்துள்ளன. 2015–2016–ம் ஆண்டு வரவு–செலவுத்திட்டத்தில் இத்துறைக்கு 198.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக பட்ஜெட்: காவல் துறைக்கு ரூ.5569 கோடி

மாநிலத்தில் உள்ள சிறைக்கட்டமைப்பும் பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2015–2016–ம் ஆண்டு வரவு–செலவு திட்டத்தில் இத்துறைக்கு 227.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதித்துறையை நவீன மயமாக்கும் பணியை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். 2015–2016–ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் நீதி நிர்வாகத்துக்கு மொத்தமாக 809.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Monday, 23 March 2015

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கலைக்குழு பிரச்சாரம்: சென்னை கலெக்டர் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 23- பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கலைக்குழு பிரச்சாரம்: சென்னை கலெக்டர் தொடங்கி வைத்தார்

சென்னையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு கலைப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி இன்று துவக்கி வைத்தார். 

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு உறுதியான தார்சாலைகள் அமைக்கும் திட்டம், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகள் வழங்கும் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற பயிலரங்கம், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் பேரணிகள், வாகனங்கள் மூலமாக கலைக்குழுவினைரைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதன்படி, இன்று (23.03.2015), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, அரும்புகள் அறக்கட்டளை  மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு (ஃபெட்காட்)ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த கலைப் பிரச்சார குழுவின் வாகனத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இப்பிரச்சார வாகன கலைக்குழுவினர் இன்று ராயபுரம், புது வண்ணாரப்பேட்டை, கண்ணதாசன் நகர், பெரம்பூர், அயனாவரம், வில்லிவாக்கம், பாடி, கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளிலும், நாளை (24.03.2015) அண்ணா நகர், கீழ்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம் வடபழனி மற்றும் போரூர் ஆகிய பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொள்கின்றனர். 

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை கூடுதல் இயக்குநர் எம்.ஜெயந்தி, அரும்புகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் இராஜ மதிவாணன், இயக்குநர் வி.லதா மதிவாணன், இந்திய ரெட்கிராஸ் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் ஹரிஷ் எல் மேத்தா, சென்னை மாவட்ட செயலர் சத்தியநாராயணன், ஃபெட்காட் அமைப்பின் நிர்வாகிகள் டி.ஏ.பிரபாகர், எம்.செல்வராஜ், எம்.நாகராஜன், கே.ஜீவரத்தினம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தாகத்தை தணிக்க குடிநீர்– நீர் மோர் பந்தல் அமையுங்கள்: ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை, மார்ச் 23–
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மக்கள் நலப்பணிகளை தன்னலம் கருதாது ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்படுத்துவதில் `அ.தி.மு.க.‘ எப்பொழுதும் முன்னணியில் இருந்து வருவதை மக்கள் நன்கு அறிவர்.
அந்த வகையில், என் உயிரினும் மேலான என தருமைக்கழக உடன்பிறப்புகள் தற்போது ஆற்ற வேண்டிய பணி ஒன்றினை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
அது தான் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் பணி.
வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கிவிட்டதால், கழக உடன்பிறப்புகள் தாங்கள் வாழும் பகுதிகளில் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், மதியம் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்த பணியினை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்

போதையில் அண்ணன்–தம்பி மோதல்: கத்திக்குத்தில் காயம் அடைந்த வாலிபர் பலி

கோயம்பேடு, மார்ச்.23–
கோயம்பேடு நெற்குன்றம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (37). காய்கறி வியாபாரி. இவரது தம்பி ராஜபாண்டியன். 2 பேரும் கடந்த 15–ந்தேதி மது போதையில் மோதிக் கொண்டனர். அப்போது ராஜபாண்டியன் கத்தியால் ஜெயராமனை குத்தினார். உடனே ஜெயராமனை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயராமன் இறந்தார். இதைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார் ராஜபாண்டியன் மீது ஏற்கனவே பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச். 23–
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் 3 தடுப்பணைகள் கட்ட ஏற்பாடு செய்து வருகிறது.
இதை கண்டித்து பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிராகவும், அதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:–
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி, அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவில்லை. இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறி விடும். இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக மக்களின் ஒட்டு மொத்த பிரச்சினை. இதை யாரும் அரசியல் ஆக்க கூடாது.
உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை டெல்லி அழைத்துச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. உடனே ஒரு மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வேண்டும். இதை செய்யாத தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.
அவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. பெங்களூர் வழக்கில் மூழ்கி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல் காரணங்களால் எல்லா கட்சிகளும் ஒன்றுபடுவதில்லை.
இந்த கலாசாரம் மாற வேண்டும். இதில் கவுரவம் பார்க்க கூடாது. வருகிற 28–ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழக மக்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். 2016–ல் பா.ம.க. ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது உறுதி. அப்போது அரசியலிலும், அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. துணை தலைவர்கள் கே.என். சேகர், ஈகை தயாளன், மாவட்ட அமைப்பாளர் மு.ஜெயராமன், இளைஞர் அணி மாம்பலம் வினோத் நாடார், மாவட்ட செயலாளர்கள் ராம.கன்னியப்பன், ஏழுமலை, வெங்கடேசன், கோயம்பேடு பாண்டியன், சீமான் இளங்கோவன், நிர்வாகிகள் முத்துக்குமார், ஜி.வி.சுப்பிரமணியன், மேகநாதன், மொசைக்ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

3 ஆண்டுகளில் 218 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன: சைதை துரைசாமி தகவல்

சென்னை, மார்ச் 23-
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்த போது மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–
மாநகராட்சி பொறுப்பை நான் ஏற்றபிறகு இதுவரை மக்கள் பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.18,222.37 கோடி. கடந்த 3 நிதி ஆண்டுகளில் அரசு வழங்கிய நிதியையும், அம்மா வழங்கிய சிறப்பு நிதி மற்றும் மாநகராட்சி வருவாயை கொண்டு மாநகராட்சி செய்துள்ள பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி மக்களுக்கு நன்றாக தெரியும்.
ஆனால் மு.க.ஸ்டாலின் இந்த திட்டங்களை மறைத்து விட்டு மக்கள் பணியாற்றும் சென்னை மாநகராட்சியை பார்த்து, தி.மு.க.வினர் செய்த பணிகளை போல, அவர்கள் செயல்பட்டதை போல நாங்கள் செயல்படவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அறிக்கை விடுகிறார்கள்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே மாநகராட்சி பணிகளை செய்தார்கள். அவர்களுக்கு நம்மை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை.
1996 முதல் 2001 வரை சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் அளித்த பட்ஜெட்டில் 159 அறிவிப்புகள் மட்டுமே இருந்தன. அதில் நிறைவேற்றப்பட்டது வெறும் 60 மட்டும்தான்.
2006 முதல் 2011 வரை தி.மு.க. மேயர் அறிவித்த அறிவிப்புகள் 606. அதில் நிறைவேற்றப்பட்டவை 253 மட்டுமே.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் 419 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதில் 218 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பணி முடிக்கப்பட்டுள்ளவை 52.3 சதவீதம்.
165 பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன. சென்னை மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் இந்த நிதி ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்: தி.மு.க.–காங். வெளிநடப்பு

சென்னை, மார்ச்.23–
மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் மேயர் சைதை துரைசாமி பட்ஜெட் உரையை வாசித்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் சந்திரபோஸ் (தி.மு.க.) எழுந்து நின்று, ‘இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான அம்சங்கள் எதுவும் இடம் பெறவில்லை’ என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தார்கள்.
மீண்டும் தி.மு.க. கவுன்சிலர்கள் அவைக்கு திரும்பிய போது மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினை குறை கூறும் வகையில் கருத்துக்கள் தெரிவித்தார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மன்றத்தின் நடுவே வந்து மேயருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து மீண்டும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் 3–வது முறையாகவும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–
மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மக்கள் தேவைகளை நிறைவேற்றக்கூடிய எந்த அம்சங்களும் இல்லை. குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். குடிநிரில் கழிவுநீர் கலக்கிறது.
இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்கும் எந்த திட்டமும் இல்லை. தேவை இல்லாமல் மு.க.ஸ்டாலின் மீது தவறான குற்றச்சாட்டுகளை மேயர் பதிவு செய்கிறார். புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாக இது மக்கள் விரோத பட்ஜெட். இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.’’ என்றார்.
காங்கிரஸ் கவுன்சிலர் தமிழ்செல்வனும் பட்ஜெட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தார். அவைக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ‘மாநகராட்சி பட்ஜெட்டில் எந்த நல்ல அம்சங்களும் இல்லை’ என்றார்.

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

வாட்ஸ்–அப் இன்றைய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் இதில் மூழ்கியே கிடக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு வாலிப பட்டாளங்களை கவர்ந்துள்ள வாட்ஸ்–அப்பில் நல்லதும் கெட்டதுமாக ஏராளமான தகவல்கள் குவிந்துக்கிடக்கின்றன.
ஆபாச ஆடியோக்கள், வீடியோக்களுக்கும் வாட்ஸ்–அப்பில் பஞ்சமில்லை. சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசுடன் ஆபாசமாக பேசி வாட்ஸ்–அப்பில் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்–அப்பில் வெளியான பல்வேறு வீடியோக்களும், போட்டோக்களும் வாட்ஸ்–அப் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவருடன், திருநங்கைகள் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட வீடியோ, பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், இன்ஸ்பெக்டரை கடிந்து கொள்ளும் ஆடியோ என அடுத்தடுத்த வாட்ஸ்–அப் வெளியீடுகள் போலீஸ் வட்டாரத்தையே கலங்கடித்தன.
தொழில் நுட்ப வளர்ச்சியில் எப்போதுமே நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். அதனை நாம் பயன்படுத்தும் விதத்திலேயே அது இருக்கிறது. இதற்கு உதாரணமாக 16 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தவித்து வந்த சென்னை வாலிபர் ஒருவர் வாட்ஸ்–அப்பின் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். நெஞ்சை நெகிழ வைக்கும் இச்சம்பவம் சென்னை திருவொற்றியூரில் அரங்கேறியிருக்கிறது.
அந்த வாலிபர் யார்? அவர் காணாமல் போனது எப்படி? 16 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வாலிபரை வாட்ஸ்–அப் குடும்பத்தினருடன் கொண்டு சேர்த்தது எப்படி?
அது பெரிய்..ய பிளாஸ் பேக்.
திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தாமோதரன்–சுந்தரி. இந்த தம்பதிகளுக்கு சரவணன் (33), ரவிச்சந்திரன் (31), பார்த்திபன் (30), கோபி (27), சிகாமணி (23), ஏழுமலை (21) ஆகிய 6 மகன்கள். கடந்த 1999–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுந்தரியும், தாமோதரனும் குடும்பத்தோடு புதுச்சேரிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றனர்.
அப்போது 5–வது மகனான சிகாமணிக்கு 7 வயது. அருகில் உள்ள மாமா வீட்டுக்கு தனியாக சென்ற சிகாமணி வழி தெரியாமல் எங்கேயோ சென்று விட்டார். இதனால் பதறிப்போன பெற்றோரும், குடும்பத்தினரும், அந்த பகுதி முழுவதும் அவரை தேடினர். ஆனால் சிகாமணி சிக்கவில்லை.
இதையடுத்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்த தாமோதரன்–சுந்தரி தம்பதியினர், உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்தனர். சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து மகனை தேடி அலைந்த பெற்றோர் தவித்துப்போய் திருவொற்றியூருக்கு திரும்பினர்.
இதன் பின்னர், சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் பலவற்றிலும் ஏறி இறங்கினர். ஆனால் சிகாமணியை கண்டுபிடிக்கவே முடியவில்லை. பெற்ற தாய்க்குத்தான் தெரியும், பிள்ளையின் பிரிவு என்பார்கள். அந்த வகையில் பாசக்கார தாயான சுந்தரியும், மகன் எப்படியும் கிடைத்துவிட மாட்டானா? என தினம் தினம் ஏக்கத்திலேயே காலம் தள்ளினார். கோவில் கோவிலாக ஏறி குறிகேட்டார். அப்போதெல்லாம் ‘‘உன் மகன் பத்திரமா இருக்கான்மா’’.. ‘‘அவனா உன்ன தேடி வருவான்’’ என்று சாமியார்கள் கூறி வந்துள்ளனர். இந்த நம்பிக்கை ஒன்றே சுந்தரியின் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தது.
இது ஒரு புறமிருக்க... குடும்பத்தை பிரிந்து விடுதியிலேயே வாழ்க்கையை ஓட்டி வந்தார் மாயமான சிகாமணி. தாய்–தந்தை, அண்ணன்கள், தம்பி என அத்தனை உறவுகள் இருந்தும் அனாதையை போல இருக்க வேண்டியதாகி விட்டதே என, சிகாமணி, தினமும் கண்ணீர் சிந்தினார். பேசின்பிரிட்ஜ் பகுதியில் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி இருந்த சிகாமணி, தற்போது எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
வாட்ஸ்–அப் ஏற்படுத்தி வரும் பரபரப்புகளை பார்த்து, சிகாமணியின் மனதிலும் ஒரு எண்ணம் உதித்தது. நாமும், வாட்ஸ்–அப் மூலமாக குடும்பத்தினரை தேடிப்பார்த்தால் என்ன? என்று எண்ணிய சிகாமணி தனது குரலை ஆடியோவாக பதிவு செய்து, வாட்ஸ்–அப்பில் அனுப்பினார். அதில், தான் காணாமல் போனது பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் கூறி இருந்தார். கடந்த 19–ந்தேதி இரவு 8 மணி அளவில் வாட்ஸ்–அப்பில் மின்னல் வேகத்தில் பரவிய இந்த தகவல் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் என்பவரின் செல்போனுக்கும் சென்றது.
சிறுவயதில் காணாமல் போன சிகாமணியை சுந்தரியும் அவரது குடும்பத்தினரும் தேடி அலைவது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியும்.
இதையடுத்து கார்த்திக், சுந்தரியின் வீட்டுக்கு ஓடிச்சென்று அந்த ஆடியோவை போட்டுக்காட்டினார். அதில் சிகாமணியின் 2 செல்போன் எண்களும் இருந்தன. உடனடியாக அந்த நம்பருக்கு போன் செய்து பேசினர். சுமார் 1 மணி நேரத்தில் வாட்ஸ்–அப் புண்ணியத்தில் சிகாமணி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்தார். 16 ஆண்டுகள் கழித்து சிகாமணி வீடு திரும்பியது சுந்தரியின் குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிகாமணியை கட்டித்தழுவி அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. 16 ஆண்டுகளாக தவித்த ஒரு தாயின் ஏக்கத்துக்கு 1 மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்த ‘‘வாட்ஸ்–அப்’’புக்கு ஒரு ராயல் சல்யூட்.

சுகாதாரத்துறை அதிகாரி கொலைக்கு ஆதாரம் உள்ளது: இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 23–
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் சேப்பாக்கத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும் மத்திய–மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பட்டன.
அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாவது:–
ஏழைகளையும், விவசாயிகளையும் வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு, செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடியின் முகமூடி கிழிந்து வருகிறது.
பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில்தான் இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. சாதாரண உயரத்தில் இருந்த மோடி இந்த உயரத்துக்கு வந்தது காங்கிரஸ் வாங்கி தந்த சுதந்திரமும், ஜனநாயகமும் தான் என்பதை மறந்து விடக்கூடாது.
தமிழக அரசும் இந்த சட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறது. நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன். உங்களுக்காக எத்தனையோ பேர் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் நிலத்தை பிடுங்குவதற்கு நீங்கள் உதவலாமா?
நெல்லையில் ஒரு நேர்மையான அதிகாரி மரணத்துக்கு ஒரு அமைச்சர் காரணமாக இருந்தார். அடுத்ததாக சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை செய்ததாக கூறினார்கள். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் உள்ளது. இல்லையென்றால் என் மீது வழக்கு போடுங்கள். கைது செய்யுங்கள்.
அதிகாரி அறிவொளி கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். நாட்டு மக்களை காப்பாற்றும் கடமை நமக்கு உள்ளது.
வருகிற 28–ந்தேதி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் காங்கிரஸ் முழுமையாக பங்கேற்கும். கர்நாடகத்தில் ஆளுவது காங்கிரசாக இருந்தாலும் காவிரியில் தடுப்பணை கட்டுவதை கடுமையாக எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, மாவட்ட பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம், மகளிர் அணி தலைவி சாய்லட்சுமி, செயலாளர் சாந்த ஸ்ரீனி, நிர்வாகிகள் கடல்தமிழ், மயிலை அசோக், துறைமுகம் ரவிராஜ், தமிழ்செல்வன், நாச்சிகுளம் சரவணன், வக்கீல் சுதா, சித்ராகிருஷ்ணன், நிலவன், சூளை ராஜேந்திரன், சரஸ்வதி நாலடியார், கனிபாண்டியன், அகரம் கோபி, புல்லட் சாகுல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Thursday, 19 March 2015

மோகன்ராஜுலு மாற்றம்: பா.ஜனதா அமைப்பு செயலாளராக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி நியமனம்

சென்னை, மார்ச். 19–
பா.ஜனதா கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பதவியில் பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளே நியமிக்கப்படுவார்கள்.
கட்சி தலைவர்களிடையே கருத்துவேறுபாடு, கோஷ்டி பூசல் ஆகியவற்றை களைதல், கூட்டணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான பணிகளை அமைப்பு செயலாளராக இருப்பவர் அனைவரையும் அரவணைத்து செய்து முடிப்பார். எனவே இந்த பதவிக்கு பெரும்பாலும் தன்னலமற்று சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளே நியமிக்கப்படுவார்கள். இதுவரை தமிழக பா.ஜனதா அமைப்பு செயலாளராக மோகன் ராஜுலு செயல்பட்டு வந்தார். இப்போது அந்த பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டுள்ளார்.
புதிய அமைப்பு செயலாளராக கேசவ விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் வெளியிடப்பட்டது.
கேசவ விநாயகம் முழுநேர ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி. தற்போது தென் தமிழகத்தின் பிரசாரகராக பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதி ஆகும்.

ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தம்: பூண்டி ஏரி வறண்டது

சென்னை, மார்ச். 19–
சென்னை குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. வீராணம் ஏரியும் கை கொடுக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு இதே நாளில் பூண்டி ஏரியில் 232 மில்லியன் கனடி தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இன்றைய நிலவரப்படி 171 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருக்கிறது.
கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் முறையாக வராததாலும் பூண்டி ஏரி வரலாறு காணாத அளவு வறண்டு காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் புழல் ஏரியில் 2 ஆயிரத்து 272 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு ஆயிரத்து 682 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருக்கிறது. செம்பரம்பாக்கத்தில் கடந்த ஆண்டு 820 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இப்போது 879 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.
சோழவரம் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 72 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்றைய நிலவரப்படி 47.23 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருக்கிறது.
கடந்த ஆண்டு 4 ஏரிகளிலும் சேர்ந்து இதே நாளில் மொத்தம் 3 ஆயிரத்து 396 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்று 2 ஆயிரத்து 802 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருப்பு உள்ளது.
இன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் வரத்து 30 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பூண்டியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு 184 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலத்தில் இருந்து கோடை காலம் முழுவதும் 3 டி.எம்.சி. தண்ணீர் வரவேண்டும். வழக்கமாக அவர்கள் முழுமையாக தண்ணீர் தருவது இல்லை. இதுவரை 1.3 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்துள்ளது.
இன்னும் 1.7 டி.எம்.சி. தண்ணீர் வரவேண்டும் கடந்த மாதம் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் கிருஷ்ணா தண்ணீர் குறித்து ஆந்திராவில் பேச்சுவார்த்தை நடந்தது. என்றாலும் கிருஷணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா தண்ணீர் மீண்டும் ஏப்ரல் 1–ந்தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வீராணம் ஏரி தண்ணீர் சென்னைக்கு தொடர்ந்து வருகிறது. வீராணம் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலில் சுருக்கு வலை மீன் பிடிப்பு விவகாரம்: 3 மாதங்களில் முடிவு எடுக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, மார்ச். 19–
சென்னை ஐகோர்ட்டில், மீனவர் செல்வம் உட்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
கடலில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதிதுள்ளது. இந்த சுருக்கு வலை கொண்டு மீன் பிடிக்கம்போது, மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கி இறந்து விடுவதாகவும், இதனால், மீன் இன பெருக்கம் தடை படுவதாகவும் தமிழக அரசு தடை விதித்ததற்கு காரணம் கூறியுள்ளது.
இந்த சுருக்கு வலை தடை விதித்தது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டபோது, இதுகுறித்து ஆய்வு செய்து நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு ஆய்வுகளை மேற்கொண்டு, சுருக்கு வலையின், அளவை பெரிதுப்படுத்தி, அதன் பின்னர் அந்த வலையை பயன்படுத்த மீனவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று கூறியுள்ளது.
எனவே, சுருக்கு வலைக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, சுருக்கு வலைக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றக் கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து, ‘சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டுள்ளது. எனவே, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் விதமாக தடை விதித்தால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே மத்திய அரசு வலையின் அளவை பெரிதாக்கி பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளதால், மனுதாரர்களின் கோரிக்கை குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு தொடர்பாக இதுவரை 700 அரசு பஸ்கள் ஜப்தி நடவடிக்கைக்கு உள்ளானது: ஐகோர்ட்டில், அரசு தரப்பு தகவல்

சென்னை, மார்ச். 19–
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும் போது, சுங்க கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஆனால், சாலைகளை சரியாக பராமரிப்பதில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் சம்பத் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதேபோல, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் எஸ்செல் உட்பட 3 நிறுவனங்கள், ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தன. அதில், அரசு பஸ்கள் சுங்கக் கட்டணத்தை நீண்டகாலமாக செலுத்தாமல், உள்ளது. இதனால், சாலைகளை முறையாக பராமரிக்க முடிவதில்லை’ என்று கூறியிருந்தது.
இந்த மனுக்கள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த பிப்ரவரி 3–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அரசு பஸ்கள், சுங்கச்சாலையை பயன்படுத்துவதற்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத பட்சத்தில், சுங்கச்சாலைகளை பயன் படுத்த அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ‘சுங்க கட்டணம் பாக்கித் தொகை ரூ.1.72 கோடிக்கான 5 காசோலைகளை தனியார் சுங்க கட்டண வசூலிக்கும் நிறுவனத்துக்கு வழங்கினார். இதையடுத்து, வழக்கை வருகிற ஏப்ரல் 24–ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், அரசு தரப்பில் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி, ‘நஷ்டத்தில் இயங்குவதாக இருந்தால், போக்குவரத்து கழகங்களை இழுத்து மூட வேண்டியதுதானே’ என்று கருத்து தெரிவித்தார். மேலும், போக்குவரத்து கழகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், இதுவரை எத்தனை பஸ்கள் ஜப்தி உத்தரவுக்கு உள்ளானது? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அட்வகேட் ஜெனரல் 700 பஸ்கள் என்று கூறினார்

தவறான தகவலை தெரிவித்துள்ளார்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு சென்னை மாநகராட்சி பதில்

சென்னை, மார்ச். 19–
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
16.01.2015 அன்று ரெயில்வே மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே பட்ஜெட்டில், ரெயில்வே மேம்பாலம் அமைத்திட ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக 06.03.2015 அன்று வில்லிவாக்கம் ஆய்வுப் பணியின் போதும், 18.03.2015 அன்று கொளத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் மு.க. ஸ்டாலின் பேசி உள்ளார்.
இச்செய்தி குறித்து, சென்னை மாநகராட்சி உண்மைத்தன்மையை பொதுமக்கள் புரிந்து கொள்வதற்காக கீழ்க்கண்ட நிகழ்வுகளை தேதி வாரியாக தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த 2003 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா தமிழக முதல்வராக இருந்த போது, அம்மாவின் ஆணையின்படி, பொது மக்களின் வசதிக்காக கொளத்தூர் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண். எல்.சி.1–ல் மேம்பாலம் அமைக்க 30.04.2003 அன்று சென்னை மாநகராட்சி மன்ற தீர்மான எண். 220/2003 மூலம் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேற்கண்ட பணியை தமிழ்நாடு நகர்ப்புற முன்கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், திருவாளர்கள் ஸ்டுப் கன்சல்டன்ட்ஸ்–க்கு 12.04.2004 அன்று வழங்கியது.
அதன்பிறகு, புரட்சித்தலைவி அம்மாவின் உத்தரவின்படி 30.06.2004 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 50:50 செலவு பகிர்வு முறையில் கொளத்தூர் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண். எல்.சி.1ல் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ரெயில்வே துறையைக் கேட்டுக்கொண்டது.
இதன் அடிப்படையில் 2005-2006ல் தென்னக ரெயில்வேயில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளில் ரூ.7.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணி சேர்க்கப்பட்டது.
பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் ஸ்டுப் கன்சல்டன்ட்ஸ் அளித்த பணியிட வரைபடம் சாத்தியக்கூறு இல்லாத வகையில் கைவிடப்பட்டது.
திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் இத்திட்டத்தை புரட்சித் தலைவி அம்மா ஆணையின் படி, சென்னை மாநகராட்சி 2012–2013 நிதிநிலை அறிக்கையில் இப்பணி மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து செய்து வரும் பணிகள் பற்றிய விவரம்:–
* 18.04.2012 அன்று தமிழ்நாடு நகர்ப்புற முன் கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் கலந்தறிதற்குரிய வரை நியமிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
* இப்பணியை விரைந்து மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தமிழ்நாடு நகர்ப்புற முன்கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்துக்கு 04.05.2012, 18.09.2012 நினைவூட்டு கடிதம் அனுப்பியது.
* 17.10.2012 அன்று தங்களிடம் நிதி ஆதாரம் தற்போது இல்லாததால் கலந்தறிதற்குரியவர் பணியை சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தமிழ்நாடு நகர்புற முன்கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் கேட்டுக்கொண்டது.
* மன்ற தீர்மான எண்.122/2013 நாள் 22.02.2013 மூலம் சென்னை மாநகராட்சி நிதியில் கலந்தறிதற்குரியவரை தெரிவு செய்து தர தமிழ்நாடு நகர்ப்புற முன்கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
* பல்வேறு கலந்தறிதற்குரியவர் தேர்வு செய்யும் கட்டங்களுக்கு பிறகு 21.10.2013 அன்று கலந்தறிதற்குரியவர் நியமிக்கப்பட்டார்.
* 25.11.2013 அன்று தொடக்க திட்ட ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* 10.02.2014 அன்று போக்குவரத்து ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* 10.06.2014 அன்று சாத்தியக்கூறு மற்றும் மண் பரிசோதனை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* 07.08.2014 அன்று இடைக்கால அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* 10.08.2014 அன்று மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டது.
* 23.08.2014 அன்று மக்கள் கருத்து கேட்புக்கூட்ட ஆலோசனை மற்றும் கருத்துகள் அடிப்படையில் கலந்தறிதற்குரியவருடன் மாண்புமிகு மேயர் மற்றும் வட சென்னை பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
* 04.09.2014 அன்று பல்வேறு உத்தேச பணியிட வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
* 12.09.2014 அன்று ஐ.சி.எப், பொது மேலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
* 15.09.2014 மற்றும் 16.09.2014ல் ஐ.சி.எப்.க்கு சொந்தமான இடத்தில் ஐ.சி.எப். அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
* 17.09.2014 அன்று ரெயில்வே துறையுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
* 19.09.2014 அன்று தென்னக ரெயில்வே மற்றும் ஐ,சி.எப் உடன் கலந்தாலோசித்ததை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பணியிட வரைபடம் தென்னக ரெயில்வேக்கு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
* 17.02.2015 அன்று மீண்டும் ஐ.சி.எப். இடத்தில் ஐ.சி.எப். அதிகாரிகளுடன் அயனாவரம் தாலூகா வருவாய் அதிகாரிகள் சென்னை மாநகராட்சி நிலம் மற்றும் உடைமைத் துறை கோட்டாச்சியர், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலந்தறிதற்குரியவர் ஆகியோருடன் கூட்டுப்புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
* கூட்டுப் புல ஆய்வின் போது, ஐ.சி.எப். தொழிற்சாலை வளாகத்தில், மேம்பாலத்திற்கு தேவைப்படும் நிலங்களின் அளவுகள் மற்றும் விஸ்தீரனம் ஐ.சி.எப். அதிகாரிகளுக்கு அளந்து நிலத்தில் கோடிட்டு காண்பிக்கப்பட்டது.
* கலந்தறிதற்குரியவர், கொளத்தூர் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள மனைகளின் அளவுகளும், மேம்பாலத்தின் ஒழுங்கினையும் ஒன்றின்மேல் ஒன்றாக துல்லியமாக வரையும் பணியினை தற்போது மேற்கொண்டுள்ளார்கள்.
இவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டு வில்லிவாக்கம் கொளத்தூர் மேம்பாலப் பணிக்காக 2003ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும், மக்களின் முதல்வர் அம்மா தொடர்ந்து இத்திட்டத்தை வலியுறுத்தியதின்பேரில் 2005–2006 ஆண்டு ரெயில்வே திட்ட பட்டியலில் ரூ.7.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இத்திட்டம் ரத்தாகாமல் இருக்க தொடர்ந்து ரெயில்வே திட்டப் பட்டியலில் தொடர்வதற்காக சில லட்சங்கள் வருடா வருடம் ரெயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அந்த அடிப்படையில் தான் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட் அறிவிப்பில் ரூ.7.35 கோடி ஒதுக்கப்படவில்லை.
2005–2006ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, 16.01.2015 அன்று ரெயில்வே மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வைத்த கோரிக்கையை ஏற்று இந்த வருட ரெயில்வே பட்ஜெட்டில், ரெயில்வே மேம்பாலம் அமைத்திட ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மையில்லாதது என்பதை சென்னை மாநகராட்சி மேற்கண்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் மறுப்பதுடன் இதைப்போல பல தவறான செய்திகளை கொளத்தூரில் பேசி உள்ளார். இவை அனைத்திற்கும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற உதாரணம் மூலம் மறுப்பு தெரிவிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, 15 March 2015

அதிமுக ஷக்தி மூலக்ககடை

அதிமுக மூலக்கடை ஷக்தி ( மூலக்கடை)உதவும் மனப்பான்மை கொண்ட, நல்லவர், 

இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை!

இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை!

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வழக்கறிஞர் பாலு உரை

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 25 ஆவது கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர. அருள், வழக்கறிஞர் பாலு, சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், பசுமைத்தாயகம் அமைப்பின் நிர்வாகி கணல் கண்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தின் இன்றைய அமர்வில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இலங்கையில் இனவாதம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் க. பாலு உரையாற்றினார். அவரது உரை விவரம் வருமாறு: இலங்கையில் மதச் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது குறித்து பசுமைத்தாயகம் அமைப்பு அதன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது. இலங்கை பல இன, மதக் குழுக்களின் தாயகம் ஆகும். ஆனால், பன்முகத்தன்மை கொண்ட நாடு என்ற போதிலும், அதிகரித்து வரும் சிங்கள தேசியவாதப் போக்கு காரணமாக, புத்தமதத்தைச் சாராத சமுதாயங்கள் மீது குறிப்பாக ஹிந்து, இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மதங்களைக் கடைபிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இலங்கையில் சமரசம் மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், சிங்கள தேசியவாதப் பிரிவுகளால் மற்ற மதப்பிரிவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அரசுக்கு மனித உரிமை ஆணையர் மீண்டும், மீண்டும் விடுக்கும் வேண்டுகோள்கள் இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை.

2013 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள், அவர்கள் வழிபடும் மசூதிகள், அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள், வன்முறைகள், அச்சுறுத்தல்கள் என 280 நிகழ்வுகள் நடந்திருப்பதாக இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 300 ஆண்டுகள் பழமையான அனுராதபுரம் மசூதியை புத்த மத துறவிகள் தாக்கினார்கள். அதேபோல், மாத்தளை நகரில் உள்ள மசூதி முன்பாக திரண்ட 2000 பேர் கொண்ட கும்பல், சிங்கள நாட்டில் இஸ்லாமிய மசூதி இருப்பது சட்டவிரோதம் என்று கூறி வன்முறையில் ஈடுபட்டதால், அங்கு நடைபெற்ற தொழுகை பாதிக்கப்பட்டது. அந்த மசூதி மாத்தளையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் போதிலும், அம்மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று இலங்கை மத விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது. இத்தகைய பல நிகழ்வுகளில் புத்தமத துறவிகள் பங்கேற்றதையும், அந்த வன்முறைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதையும் கண்ணால் கண்ட சாட்சிகள் விளக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன
.
அதேபோல், கிறித்தவர்கள் மீதும் , கிறித்தவ தேவாலயங்கள் மீதும் 103க்கும் அதிக முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக கிறித்தவ மத குழுக்கள் கூறியுள்ளன.
அரசின் செயல்பாடற்ற தன்மையால் துணிச்சல் அடைந்த பொதுபல சேனா எனப்படும் தீவிரவாத புத்தமத துறவிகள் அமைப்பினர், வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசினர்; அதுமட்டுமின்றி, புத்தமதம் தான் சிறந்த மதம் என்றும் வலியுறுத்தத் தொடங்கினர். இலங்கை அதிபரின் சகோதரரும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய இராஜபக்சே அண்மையில் ஆற்றிய உரையில், இலங்கைக்கு பொதுபல சேனா அமைப்பு ஆற்றிவரும் பணிகள் பாராட்டத்தக்கவை என்று கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த இலங்கை இன அழிப்புப் போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன& மத சகிப்புத்தன்மையின்றி அதிகரித்து வரும் வன்முறைகள் அனைத்துமே இலங்கைப் போருக்கான பொறுப்புடைமையை நிர்ணயித்து தவறு செய்தவர்களை தண்டிப்பதற்கு இலங்கை அரசுக்கு அரசியல் துணிச்சல் இல்லாததால் ஏற்பட்ட நேரடி விளைவுகள் ஆகும். அதுமட்டுமின்றி, தமிழர்களின் அடையாளம், மதம், கலாச்சாரம் ஆகியவற்றை திட்டமிட்டு அழிப்பதற்கான அடையாளமாகவும் இந்த வன்முறைகள் திகழ்கின்றன.

பேரவையின் தலைவர் அவர்களே! இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த வன்முறைகள், இப்போது நடைபெறும் வன்முறைகள் ஆகியவை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை பசுமைத்தாயகம் அமைப்பு வலிமையாக ஆதரிக்கிறது. இலங்கையில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை சுதந்திரத்தை நிலை நிறுத்தவும், அங்கு நடைபெறும் தீமைகளை முடிவுக்கு கொண்டுவரவும் மனித உரிமை பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்