Monday, 21 December 2015

இப்போது தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 100 இடங்களை பிடிக்கும்: ஜி.கே.மணி சொல்கிறார்

விழுப்புரம், டிச. 20–இப்போது தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 100 இடங்களை பிடிக்கும்: ஜி.கே.மணி சொல்கிறார்
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பா.ம.க.வின் 8–வது கிழக்கு மண்டல மாநாடு மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இம்மாநாடு விழுப்புரம் பூத்தமேட்டில் வரும் 3–ந் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய இருமாவட்டங்களை ஒருங்கிணைந்து நடக்கிறது. ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் பூரணமதுவிலக்கு, லஞ்சம் ஊழலற்ற ஆட்சி, பாசனமேம்பாட்டுத்திட்டம், இலவச கல்வி, தேசிய சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது. பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வரைவுதேர்தல் வாக்குறுதிக்குப்பிறகு மக்கள் மனநிலை மாறிவருகிறது. அவரது தேர்தல் அறிக்கையை மக்கள் பேசிவருகிறார்கள். இன்று தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 80, 100 சீட்டுகளை பெறுவது உறுதி.
கனமழையால் சென்னை, காஞ்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இன்னும் நிவாரணப்பணிகளும், மீட்புபணிகளும் சரியாக நடக்கவில்லை. இதனை அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெள்ளநிவாரணப் பணிகள் கணக்கெடுப்பில் குளறுபடி நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காவிட்டால் பா.ம.க. முன்னின்று போராட்டத்தை நடத்தும்.
இளைஞர்கள், மாணவிகள், மாணவர்களை சீரழிக்கும் வண்ணம் பாடல்கள் இடம்பெறுகின்றன. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்போது நடிகர் ஒருவர் பாடியிருக்கும் பாட்டு தொடர்பாக கேட்டபோது, தமிழக அரசுதான் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் மதுரையில் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்

மதுரை, டிச. 20–அனுமதி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் மதுரையில் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் ஜனவரி 17–ந்தேதியும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்தன்றும், பாலமேடு ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்திலும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக வீர விளையாட்டுக்கு தடை ஏற்பட்டது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த மத்திய–மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு காளைகளை துன்புறுத்தக் கூடாத வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி உரிய உத்தரவை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர் களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
தடைபட்ட ஜல்லிக்கட்டு எப்படியாவது இந்த பொங்கல் தினத்தில் நடக் கும் என்ற நம்பிக்கை ஜல்லிக்கட்டு வீரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் 500–க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உரிய பயிற்சி கொடுத்து தயாராகி வருகிறது.

முடிச்சூர் அருகே மாநகர பஸ் படிக்கட்டு உடைந்து பள்ளி மாணவர்கள் காயம்

தாம்பரம், டிச. 21–முடிச்சூர் அருகே மாநகர பஸ் படிக்கட்டு உடைந்து பள்ளி மாணவர்கள் காயம்
மண்ணிவாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு தடம் எண் 55 மாநகர பஸ் இன்று காலை வந்து கொண்டு இருந்தது.
காலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
முடிச்சூர்– மணிமங்கலம் ரோடு பிரிவில் பஸ் வந்தது. சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் பஸ் குலுங்கி குலுங்கி சென்றது.
திடீர் என ஒரு பள்ளத்தில் பஸ் டமார் என்ற சத்தத்துடன் இறங்கி ஏறியது.
இதனால் ஏற்பட்ட அதிர்வில் பஸ்சின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. பஸ்சின் 2 படிகள் உடைந்து விழுந்ததால் அதில் நின்று பயணம் செய்த 15 பேர் ரோட்டில் உருண்டு விழுந்தனர்.
இதனை கவனிக்காமல் பஸ் சில அடி தூரம் சென்றது. இதனால் கீழே விழுந்தவர்கள் பஸ்சுடன் இழுத்து செல்லப்பட்டு உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிலரின் சட்டை பேண்ட் கிழிந்தது.
பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போடவே பஸ் நிறுத்தப்பட்டது. உடனே டிரைவர் கண்டக்டர் இறங்கி பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றிவிட்டு உடைந்த பஸ்சை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். மேலும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தாம்பரம் பள்ளியில் படிக்கும் பிளஸ்–2 மாணவன் பாரத், பார்த்திபன், விக்னேஷ் உள்பட சில மாணவர்களுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் கள்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.முடிச்சூர் அருகே மாநகர பஸ் படிக்கட்டு உடைந்து பள்ளி மாணவர்கள் காயம்

திருச்சியில் ரூ.1 கோடி நகை, பணத்துடன் பைனான்ஸ் அதிபர் குடும்பத்துடன் காரில் கடத்தல்

திருச்சி, டிச. 21–
திருச்சி உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவர் தனது வீட்டில் சொந்தமாக அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களது மகள் அன்பரசி. தம்பி அசோக்குமார்.
நேற்று மாலை அனைவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் நுழைந்தது. 7 பேரில் ஒருவர் போலீஸ் உடை அணிந்திருந்தார்.
அவர்களை கண்டதும் விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார். என்ன என்று அவர் விசாரிப்பதற்குள் அந்த கும்பல் திடீரென அவரை தாக்கியது. கத்தியாலும் அவரது உடலை கீறியதால் குடும்பத்தினர் நிலை குலைந்து போனார்கள்.
அதனை பயன்படுத்திய அந்த கும்பல் வீட்டில் இருந்த லாக்கரை திறந்து அதில் இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் மற்றும் ஆவணங்களை அள்ளியது. பிறகு கத்தி முனையில் மிரட்டி விஜயகுமார், பிரேமா, அன்பரசி, மற்றும் அசோக்குமார் ஆகியோரை அவர்களது சொகுசு காரிலேயே அந்த கும்பல் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கடத்தியது.
காருக்குள் 11 பேர் இருந்தனர். அப்போது காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு போலீஸ் உடை அணிந்த நபர் கூறினார். உடனே கார் மரக்கடை பகுதிக்கு வந்தது. முன்னால் சென்ற வாகனத்தை கார் கடக்க முடியாமல் இருந்த போது காரில் கடத்தி செல்லப்பட்ட விஜயகுமார் கதவை திறந்து காரில் இருந்து குதித்து தப்பினார். அவரது குடும்பத்தினரை அந்த கும்பல் கடத்தி சென்று விட்டது.
இதுபற்றி விஜயகுமார் உறையூர் போலீசில் உடனடியாக புகார் செய்தார். புகாரின் பேரில் அவரது குடும்பத்தினரை போலீசார் தேட தொடங்கினார்கள். இந்த நிலையில் கரூர் அருகே மாயனூர் அணை பகுதியில் விஜயகுமார் குடும்பத்தினரை விடுவித்த அந்த கும்பல் காரையும் அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
அவர்கள் கைப்பற்றிய நகை, பணம், ஆவணங்களை கொண்டு சென்றனர். தாங்கள் விடுவிக்கப்பட்ட தகவல் விஜயகுமாருக்கு தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்று போலீசார் உதவியுடன் குடும்பத்தினரை மீட்டார்.
கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அந்த 7 பேர் கொண்ட கும்பல் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அடிக்கடி விஜயகுமாரிடம் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
மேலும் அவர்களுக்குள் ரூ.10 லட்சம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நோயாளி போல சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி 3 கிலோ தங்கம் கடத்தி வந்த பெண் விமான நிலையத்தில் கைது

ஆலந்தூர், டிச.22-

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது மியான்மர் நாட்டைச் சேர்ந்த நூர்ஜகான் (வயது 54) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தார். இவர் விமானத்தில் இருந்து சக்கர நாற்காலியில் வந்தார்.

சிகிச்சைக்காக சென்னை வருபவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் அதிகமாக சோதனை செய்வதில்லை. ஆனால் நூர்ஜகானின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததால், சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். உடனே பெண் சுங்க இலாகா அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது நூர்ஜகான் ஆடைகளில் மறைத்து வைத்திருந்த 30 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். 3 கிலோ எடை கொண்ட இந்த தங்கக்கட்டிகள் ரூ.90 லட்சம் மதிப்புள்ளவை. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நூர்ஜகானை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர். சிகிச்சைக்காக வருபவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் அதிகமாக சோதனை செய்வதில்லை என்பதை அறிந்த கடத்தல் கும்பல், மியான்மர் பெண்ணை கடத்தலில் ஈடுபடுத்தியது தெரியவந்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருவது போல் நடித்து, நூதன முறையில் தங்கம் கடத்திய சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் நாளை செயல்படும் ஐகோர்ட்டு அறிவிப்பு

சென்னை,
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று ஒரு அறிவிக்கை வெளியிட்டார். அதில், ‘மிலாது நபி பண்டிகை வருகிற 23–ந் தேதி (புதன்கிழமை) என்று முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதால், 23–ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பண்டிகை வருகிற 24–ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 23–ந் தேதி (நாளை) வழக்கம்போல் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும். மிலாது நபி பண்டிகைக்காக 24–ந் தேதி அனைத்து நீதிமன்றங்களும் விடுமுறை விடப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி விபத்து: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி மனைவியுடன் பலி

அஞ்சுகிராமம், டிச.21-

கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்தவர் ஜோகேஷ் பி.பாட்டியா (வயது 32). குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.

இவருடைய மனைவி ஷாரிலா பீன் பாட்டியா (30). இவர்களுக்கு தானியா பாட்டியா (3) என்ற மகள் இருக்கிறாள். இந்தநிலையில் நேற்று பகல் கூடங்குளத்தில் இருந்து ஜோகேஷ் பி. பாட்டியா தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் ஷாரிலா பீன் பாட்டியா, மகள் தானியா பாட்டியாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டு பயணம் செய்தார்

ஜோகேஷ் பி.பாட்டியா மோட்டார் சைக்கிளில் மயிலாடி கூண்டு பாலம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது மயிலாடியில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி ஒரு டெம்போ சென்றது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் ஷாரிலா பீன் பாட்டியாவின் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே டெம்போவை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து படுகாயத்துடன் இருந்த ஜோகேஷ் பி.பாட்டியாவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜோகேஷ் பி.பாட்டியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் 3 வயது குழந்தை தானியா பாட்டியா படுகாயம் அடைந்தாள். அந்த குழந்தையை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்தார். சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபால் விசாரணை நடத்தி வருகிறார்.

சென்னையில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தா.பாண்டியன்

கோவை, டிச. 20–சென்னையில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், ஏ.ஐ.டி.யூ.சி. மாநாட்டின் வரவேற்பு குழு தலைவருமான தா.பாண்டியன் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
ஏ.ஐ.டி.யூ.சி.யின் அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த 15–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த மாநாடு வருகிற பிப்ரவரி 25 முதல் 28–ந்தேதி வரை கோவையில் நடைபெறும்.
இந்த மாநாட்டில் ஏ.ஐ. டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளசேதத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் உற்பத்தியை தொடங்கும் வகையில் அனைத்து உதவிகளையும் மத்திய – மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
கடந்த 100 ஆண்டுக்கு பிறகு சென்னை பேரழிவை சந்தித்துள்ளது. நிவாரண வேலைகளில் நிறை, குறை உண்டு. தமிழக அரசு இன்னும் திறம்பட செயல்பட்டிருக்கலாம். பல இடங்களில் தொலை தொடர்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காவல்துறையும் திறமையாக செயல்படவில்லை. பெரும்சேதத்துக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் பிளாஸ்டிக் கழிவுகள் தான். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக வகுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் உபயோகத்தை தமிழக அரசும், உற்பத்தியை மத்திய அரசும் தடை செய்ய வேண்டும். பனை ஓலைபொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும். புதிய நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் சென்னையிலும் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழக அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தா.பாண்டியன் கூறினார்

நெல்லிக்குப்பத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார்: பள்ளி முதல்வருக்கு சரமாரி அடி–உதை

நெல்லிக்குப்பம், டிச. 21–நெல்லிக்குப்பத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார்: பள்ளி முதல்வருக்கு சரமாரி அடி–உதை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் பட்டாம் பாலகத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நெய்வேலியை அடுத்த இருப்புக்குறிச்சியை சேர்ந்த இருதயராஜ் (வயது 32) என்பவர் பள்ளி முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அப்பள்ளியில் 10–ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை சரியாக படிக்கவில்லை என ஆபாசமாக பேசி கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் ஷேக் மிஸ்வானிடம் முறையிட்டார்.
இதனால் ஆவேசம் அடைந்த ஷேக் மிஸ்வான் மற்றும் ஜமால் முகமது, ஹாஜாபாய் உள்பட 20 பேர் நேற்று மாலை பள்ளிக்கு திபுதிபுவென வந்தனர். அங்கிருந்த பள்ளி முதல்வர் இருதயராஜிடம் மாணவியிடம் எப்படி ஆபாசமாக பேசலாம் என கூறி சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்து அவரை தரதரவென நடுரோட்டுக்கு இழுத்து வந்தனர். அங்கும் அவரை தாக்கினர். இதில், பள்ளி முதல்வர் அணிந்திருந்த உடைகள் கிழிந்து கந்தலானது. தலையிலும் ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த பள்ளி முதல்வரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

ஓமலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழுவதால் பக்தர்கள் பரவசம்

ஓமலூர், டிச. 21–
சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரிய மாரியம்மன்கோவில், சின்ன மாரியம்மன் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன.ஓமலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழுவதால் பக்தர்கள் பரவசம்
எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு உண்டு. அதற்கு காரணம் மார்கழி மாதங்களில் கோவில் கருவறையில் உள்ள மாரியம்மன் மீது காலையில் சூரிய ஒளிபடும். அப்போது பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். இந்த மாதம் முழுவதும் சூரிய ஒளி மாரியம்மன் சாமி மீது படுவதால் அதை பார்த்து தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இது போன்ற அம்சத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவில் கருவறைக்குள் சூரிய ஒளிபட்டு அம்மன் பிரகாசமாக காட்சி அளிக்கிறார். இதனை ஏராளமான பொதுமக்கள் காலையில் கோவிலுக்கு வந்து பார்த்து விட்டு அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். 

Saturday, 19 December 2015

ஏற்கனவே ஒட்டப்பட்ட ரேஷன் கார்டில் இருக்கும் உள்தாள் 2016-ம் ஆண்டுக்கும் செல்லும்; தமிழக அரசு உத்தரவு


சென்னை, 

ரேஷன் கார்டுகளில் ஏற்கனவே ஒட்டப்பட்ட உள்தாள் 2016-ம் ஆண்டுக்கும் செல்லும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ரேஷன் கார்டுகள்

தமிழகத்தில் 34 ஆயிரத்து 200 ரேஷன் கடைகள் உள்ளன. ஒரு கோடியே 99 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டும் 5 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்டு வந்தது. 

கடைசியாக 2005-ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இந்த கார்டுகள் 2009-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. அதன்பிறகு, புதிய கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு வந்தது. இப்படியே, 6 ஆண்டுகள் உள்தாள் ஒட்டப்பட்டது. 

உள்தாள் இணைப்பு

கடந்த ஆண்டு இறுதியில், ரேஷன் கார்டுகளில் 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும்போது, கூடுதலாக 2016-ம் ஆண்டுக்கான உள்தாளும் அதில் சேர்ந்தே இடம் பெற்றிருந்தது. எனவே, அந்த உள்தாளையே 2016-ம் ஆண்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- 

எலக்ட்ரானிக் கார்டு

தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை (ரேஷன் கார்டு) ஆதார் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு கணினி தொகுப்பினை அடிப்படையாக கொண்டு மின்னணு (எலக்ட்ரானிக்) குடும்ப அட்டையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பொதுவினியோகத் திட்டத்தினை முழு கணினி மயமாக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியினை 2015 டிசம்பர் மாதத்துக்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. 

மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு

இந்தப் பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதால், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

எனவே, தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீடிக்கவும், ஏற்கனவே குடும்ப அட்டையில் உள்ள உள்தாளை பயன்படுத்திக் கொள்ளவும் உரிய ஆணைகள் வெளியிடுமாறு அரசை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டது. 

இதை கவனமுடன் பரிசீலித்த பின்பு அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1-1-2016 முதல் 31-12-2016 வரை மேலும் ஓராண்டிற்கு நீடித்தும், இதற்காக தற்போது குடும்ப அட்டையில் காலியாக உள்ள உள்தாளினை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

Wednesday, 1 July 2015

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

வாழப்பாடி, ஜூன் 30–
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.
வாழப்பாடி அடுத்த துக்கியாம் பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் கிராமத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, யூனியன் கவுன்சிலர், வனக்குழு தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பாலாஜி வர வேற்றார்.
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் தேவகி, வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், தலைமையாசிரியர்கள் பூங்கொடி, ஞானசேகரன், கிராம நிர்வாக அதிகாரி புஷ்பா, புதுவாழ்வு திட்ட அணித் தலைவர் ஜெயக்குமார், போலீஸ் உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணன், உதயக்குமார் ஆகியோர், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினர்.
கருத்தரங்கின் முடிவில், மகளிர் கூட்டமைப்பு தலைவி தீபா நன்றி கூறினார்

தஞ்சை அருகே பேருந்து மோதி மாணவி பலி: உறவினர்கள் சாலை மறியல்

ஒரத்தநாடு, ஜூலை 1–
தஞ்சை அருகே உள்ள சின்ன பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் சந்தியா(12). இவள் பனையகோட்டையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தாள். இன்று காலை தனது அக்கா சவுந்தர்யாவுடன் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.
அப்போது மன்னார்குடியில் இருந்து தஞ்சைக்கு வந்த அரசு பேருந்து மாணவி சைக்கிளில் தொங்கவிட்டிருந்த பை மீது உரசியது. இதனால் நிலை தடுமாறிய மாணவி சந்தியா பேருந்துக்குள் விழுந்தார். அவர் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அக்கா காயம் இன்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தும் சந்தியாவின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் பலியான மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை பேருந்து மோதி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்கம் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை.1–
பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்தும், மசோதாவைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகளின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.செபஸ்தியான் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியை அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ., தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் எம்.முத்துராமலிங்கன், கே.ஆர்.சின்னையா, சா.தோ.அருனோதயன், பி.ராமசாமி, தென்றல் கருப்பையா உள்ளிட்ட 600–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் தொடங்கிய பேரணி அண்ணா சிலை, தெற்கு நான்காம் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணி முடிவில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது

கிண்டியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

ஆலந்தூர், ஜூலை 1–கிண்டியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 22). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் பணிக்காக ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றார். வேளச்சேரி நீச்சல் குளம் அருகே சென்ற போது பின்னால் வந்த சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய செல்வராஜ் வண்டியோடு கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.
இதில் ஹெல்மெட்டோடு செல்வராஜின் தலை நசுங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கிண்டி போக்குவரத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த கணேசை கைது செய்தனர்.

சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள்: 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து சென்றனர் - அதிகாரி தகவல்

சென்னை, ஜூலை 1-சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள்: 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து சென்றனர் - அதிகாரி தகவல்
இன்று காலை 7 மணியளவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சுமார் 40 சதவீதம் பேரே ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
நேரம் போகப்போக 10 மணிக்கு பிறகு பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்தே வாகனம் ஓட்டினார்கள். 90 சதவீதத்துக்கு அதிகமானோர் ஹெல்மெட் அணிந்து சென்றதை காண முடிந்தது. ஒரு சில பெண்கள் ஹெல்மெட்டை மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டப்படி சென்றனர். போலீசார் அறிவுறுத்திய பிறகு தலையில் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டினார்கள்.
இன்று நடந்த ஹெல்மெட் சோதனை தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரத்து 900 இருசக்கர வாகனங்கள் ஓடுகின்றன. பெரும்பாலான விபத்துக்களில் தலையில் அடிபடுவதால்தான் உயிர் இழக்கிறார்கள். இதன் காரணமாக ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீதின் மற்றொரு பிரதி எங்களிடம் இருக்கும். இன்னொன்று கோர்ட்டுக்கு அனுப்பப்படும். ஹெல்மெட் அணியாமல் சிக்குபவர்கள் ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை கோர்ட்டில் ஒப்படைத்த பிறகுதான் வாகனம் திரும்பவும் வழங்கப்படும்.
சென்னையில் ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணிந்துதான் வாகனம் ஓட்டுகிறார்கள். சென்னை அண்ணா நகரில் இன்று ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை மாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை, ஜூலை. 1–தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை மாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் மிக அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தமிழகத் தலைமைத்தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியிருக்கிறார். மேலும், சில கட்சிகள் ஆதாரமின்றி புகார் கூறியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். முறைகேடுகளை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி புகார் கூறியவர்களையே சக்சேனா விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆளுங்கட்சியினர் அப்பட்டமான விதிமீறல்களில் ஈடுபட்டனர். ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் இருந்து விட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இரவோடு இரவாக தொகுதி முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டன.
காலங்காலமாக கருப்பான கழிவு நீர் வந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தற்காலிக ஏற்பாடாக சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கழிவுநீர் குழாய்களும் மாற்றப்பட்டன. பொது மக்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்பட்டது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால், 4 ஆண்டுகளில் எதையும் செய்யாமல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் இதை செய்தது விதிமீறல் என்பது சக்சேனாவுக்கு தெரியாதா? இதை தடுக்க அவர் என்ன செய்தார்?
தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலம் மாநகரைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர் கணேசன் என்பவர் காலில் அடிபட்டதாகக் கூறி மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு தண்டையார்பேட்டையில் ஆளுங்கட்சிக்காக பரப்புரை மேற்கொண்டதை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக வெளியிட்டேன்.
அதைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே குற்றச்சாற்றை முன் வைத்தனர். இந்தக் குற்றச்சாற்றின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ன நடவடிக்கை எடுத்தார்? இதுதொடர்பாக சில செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, இது குறித்து யாரும் புகார் தரவில்லை என்று கூறினார்.
அப்படியானால், ஊடக செய்திகளின் அடிப்படையில் நீங்களாக முன்வந்து நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று கேட்டபோது, ‘‘நான் இன்று தொலைக்காட்சி பார்க்கவில்லை. அதனால் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று பதிலளித்துள்ளார்.
இப்படி பதில் கூறுவது பொறுப்பான அதிகாரிக்கு அழகா? காவல் அதிகாரி பிரச்சாரம் செய்தது குறித்து அதுவரை தெரியாவிட்டாலும், அதன்பின் விசாரித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது?
181 ஆவது வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வாக்குகள் பதிவாயின. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்த முறைகேடுகளுக்கு இது ஒரு உதாரணம் தான்.
எந்தெந்த வாக்குச்சாவடியில் இதே போல் முறைகேடுகள் நடந்தன என்பதை விசாரித்து அவை அனைத்திலும் மறு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்... இல்லாவிட்டால் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும்.
தேர்தல் பரப்புரை முடிவடைந்தவுடன் வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முகாமிட்டு முறைகேடுகளை அரங்கேற்றினார்கள். இதைத் தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருப்பாரா?
அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய சந்தீப் சக்சேனா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். இவரை வைத்துக்கொண்டு 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, சந்தீப் சக்சேனாவுக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் 

கன்னியாகுமரி அருகே விசைப்படகு மோதி வள்ளம் உடைந்தது: 4 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு

கன்னியாகுமரி, ஜூலை. 1–கன்னியாகுமரி அருகே விசைப்படகு மோதி வள்ளம் உடைந்தது: 4 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு
நெல்லை மாவட்டம் கூட்டப்புளி வாடி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 30). இவருக்கு சொந்தமான வள்ளம் மூலம் இன்று அதிகாலை இவரும், ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (35). கூட்டப்புளி கோவில் தெருவைச் சேர்ந்த பெனடிக்ட் (51), தெற்கு தெருவைச் சேர்ந்த சிரியாஸ் (62) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கூட்டப்புளியில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு விசைப்படகு அவர்களின் வள்ளம் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதனால் வள்ளத்தின் முன் பகுதி உடைந்து நொறுங்கியது.
கடல் நீர் வள்ளத்திற்குள் புகுந்ததால் வள்ளம் கடலில் மூழ்கியது. அந்த வள்ளத்தில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். படகில் இருந்த வலை மற்றும் மீன்பிடி கருவிகளை மீட்பதற்காக தினேஷ் போராடினார். மற்ற மீனவர்களும் உதவியை எதிர்பார்த்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அந்த வழியாக கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் தத்தளித்த மீனவர்களை பார்த்து அவர்களை மீட்டனர்.
ஸ்டாலின், பெனடிக்ட், சிரியாஸ் ஆகிய 3 மீனவர்களையும் தங்கள் படகுகளில் ஏற்றிக் கொண்டனர். தினேஷ் வலையை மீட்பதற்காக கடலில் நீந்தி சென்றதால் அந்த வழியாக வந்த கூட்டப்புளி மீனவர்களின் வள்ளத்தில் ஏறிக்கொண்டார்.
கன்னியாகுமரி மீனவர்களால் மீட்கப்பட்ட 3 மீனவர்களும் அவர்களின் உடைந்த வள்ளமும் கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ், சப்–இன்ஸ்பெக்டர் சுடலைமணி, ஏட்டு நீலமணி ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மற்றும் படகில் இருந்த 16 மீன்பிடி தொழிலாளர்களையும், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை நசரேன், பங்கு பேரவை துணை தலைவர் லியோன், செயலாளர் சேவியர் அமலதாசன், கல்விக்குழு பொறுப்பாளர் பிரபா, மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத்தலைவர் செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள்.

ஹெல்மெட் அணியாத போலீசாரை மடக்கி பிடித்த எஸ்.பி.: 670 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், ஜூலை. 1–ஹெல்மெட் அணியாத போலீசாரை மடக்கி பிடித்த எஸ்.பி.: 670 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரடியாக ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டார். டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீசாரும் இதில் பங்கேற்றனர்.
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களது வாகனம் மற்றும் லைசென்சுகளை பறிமுதல் செய்தனர்.
ஹெல்மெட் வாங்கி வந்து அதனை காண்பித்த பிறகுதான் வாகனத்தையும் ஆவணங்களையும் ஒப்படைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சோதனை செய்துகொண்டிருந்தபோது ஒரு போலீஸ்காரர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் வந்தார். அவரை எஸ்.பி. மடக்கி பிடித்தார். அவரது வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோல நாகர்கோவில் சப்–டிவிசனில் 170 பேரும், கன்னியாகுமரி சப்–டிவிசனில் 94 பேரும், தக்கலை சப்–டிவிசனில் 330 பேரும், குளச்சல் சப்–டிவிசனில் 76 பேரும் என மொத்தம் 670 பேர் மீது ஹெல்மெட் அணியாதது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அனைத்து இடங்களிலும் இந்த சோதனை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 99 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். போலீசார் ஏற்கனவே ஏற்படுத்தி இருந்த விழிப்புணர்வு காரணமாக பெரும்பாலானவர்கள் ஹெல்மெட்டுடன்தான் வாகனம் ஓட்டினார்கள். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களது வாகனமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, 30 June 2015

மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் நடந்தால் 6 மாதம் ஜெயில் அல்லது ரூ.500 அபராதம்

சென்னை, ஜூன் 30–மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் நடந்தால் 6 மாதம் ஜெயில் அல்லது ரூ.500 அபராதம்
சென்னையில் நேற்று தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் பயணம் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு:–
* குடித்து விட்டு, பயணிகளுக்கு இடையூறு – ரூ.500 அபராதம்.
* பிறருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எடுத்து சென்றால் – ரூ.500 அபராதம்.
* அபாயகரமான பொருட்கள் எடுத்து சென்றால் – ரூ.5,000 அபராதம் மற்றும் நான்கு ஆண்டுகள் சிறை.
* ரெயிலில், எழுதுவது, போஸ்டர் ஒட்டினால் – 6 மாதங்கள் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம்.
* ரெயிலில் கூரையில் பயணம் செய்தால் – ஒரு மாதம் தண்டனை அல்லது ரூ.50 அபராதம்.
* சட்டத்திற்கு புறம்பாக ரெயிலில் நுழைந்தால் – 3 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.250 அபராதம்.
* சட்டத்திற்கு புறம்பாக ரெயில் தண்டவாளத்தில் நடந்தால் – 6 மாதங்கள் சிறை அல்லது ரூ.500 அபராதம்.
* ரெயில் இயக்கத்திற்கு தடை ஏற்படுத்தினால் – 4 ஆண்டுகள் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம்.
* முறையான பயண சீட்டு இல்லாமல் பயணித்தால் – பயண தொகையுடன், ரூ.50 அபராதம்.
* அவசர அழைப்பு மணியை தவறாக பயன்படுத்தினால் – ஒரு ஆண்டு தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம்.
* அத்துமீறி பொருட்கள் விற்பனை – 6 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்.
* போலி பயண சீட்டு விற்பனை – 3 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்.
* மெட்ரோ ரெயில் பொருட்களை சேதப்படுத்தினால் – 10 ஆண்டு சிறை தண்டனை.
* தவறான தகவல் மூலம் இழப்பீடு கேட்பது – 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
* நாசவேலையில் ஈடுபட்டால் – ஆயுள் தண்டனை, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல்: அரசு உத்தரவை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜூன் 30–
சென்னை ஐகோர்ட்டில், ஒரு வக்கீலிடம் உதவியாளராக பணியாற்றும் டி.கோபாலகிருஷ்ணன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:–
ஜூலை 1–ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் மோட்டார் சைக்கிள், அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக உள்துறை செயலாளர் கடந்த 18–ந்தேதி அரசாணை வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வாகனத்தை ஓட்டியவருக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அபராதம் மட்டுமே விதிக்க முடியும். வாகன பதிவுச் சான்றிதழை பறிமுதல் செய்யவேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் கூறவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை அபராதம் விதிக்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளார். எனவே, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனத்தில் பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த 18ந் தேதி தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் வசந்தகுமார் ஆஜராகி வாதிட்டார். அவற்றின் விவரம்:
வக்கீல்:– தாக்கல் செய்யப்பட்டுள்ள இது வழக்கு பொதுநல வழக்கு...
நீதிபதிகள்:– ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி மக்கள் சாகவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கா?
வக்கீல்:– இல்லை. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் தான் விதிக்க முடியும். அதற்காக ஆவணங்களை, வாகனங்களை பறிமுதல் செய்ய சட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், இப்போது ஆவணங்கள், வாகனங்கள் பறிமுதல் என்று புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.
நீதிபதிகள்:– இந்த வழக்கில் பொதுநலன் என்று எதுவும் இல்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதன்பின்னர், நியூ இந்தியா மக்கள் அமைப்பு என்ற அறக்கட்டளையின் தலைவர் ஜெ.எஸ்.நிம்முவசந்த் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அந்த வழக்கு மனுவில், ‘கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 18–ந்தேதி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது. ஹெல்மெட் அணிவதால் மட்டுமே விபத்தில் சிக்குபவர்கள் உயிர் பிழைத்து விடுவார் என்று கூற முடியாது. விபத்தில் தலையில் மட்டும் அடிப்பட்டு யாரும் சாவதில்லை. மேலும், ஹெல்மெட் அணிவது என்பது பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு முடியாத காரியம். கொண்டை போட்ட பெண்ணால், ஹெல்மெட் அணிய முடியாது. எனவே, வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருக்கும் பெண்கள், குழந்தைகளும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விவாதம் பின்வருமாறு:–
நீதிபதிகள்:– அறக்கட்டளை என்று கூறியுள்ளீர்கள். இந்த அறக்கட்டளையின் அடிப்படையில் நோக்கத்தில், போக்குவரத்து, சாலை, மோட்டார் சைக்கிள் தொடர்பான ஏதாவது உள்ளதா?
மனுதாரர் நிம்மு வசந்த்:– அதுதொடர்பான தீர்மானம் இயற்றியுள்ளோம்.
நீதிபதிகள்:– தீர்மானம் என்பது தேவையற்றது. அறக்கட்டளை தொடங்கும்போது என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ? அதில் போக்குவரத்து உள்ளிட்டது தொடர்பான ஏதாவது ஒரு தகவல் உள்ளதா?
மனுதாரர்:– பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிய முடியாது. இப்போது அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, பொதுமக்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்குவது போல உள்ளது. டாஸ்மாக் விற்பனைக்கு ஊக்கம் அளிக்கும் அரசு, சாலைகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிபதிகள்:– இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

ஆர்.கே.நகர் வெற்றி: ஜெயலலிதாவுக்கு கவர்னர் வாழ்த்து

சென்னை, ஜூன் 30–
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து கவர்னர் கே.ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னருக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா நன்றியை தெரிவித்துக்கொண்டாஆர்.கே.நகர் வெற்றி: ஜெயலலிதாவுக்கு கவர்னர் வாழ்த்துர்.

எம்.எல்.ஏ.வாக ஜெயலலிதா இன்று மாலை பதவி ஏற்கிறார்

சென்னை, ஜூன் 30–
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 பேருக்கும் டெபாசிட் பறிபோனது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை தேர்தல் அதிகாரி இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் ஜெயலலிதாவின் முகவரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து அந்த வெற்றி சான்றிதழ் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை அ.தி. மு.க. மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்றே எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்க முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு அவர் தலைமை செயலகத்துக்கு செல்கிறார்.
சபாநாயகர் அறையில் ஜெயலலிதா பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றுக்கொள்கிறார்.
அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்ற பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா புதிய திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
"

முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி: வாக்கு வித்தியாசம் 1,51,252 - எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு

சென்னை, ஜூன் 30-

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒட்டுமொத்த 2,40,543 வாக்குகளில் 181032 வாக்குகள் பதிவாகின. இதில் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் முடிவடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 160921 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனுக்கு 9669 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் 1,51,252 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

சுற்றுவாரியாக கிடைத்த ஒட்டு மொத்த வாக்குகள் விவரம் பின்வருமாறு:

1வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 9546 வாக்குகள் - மகேந்திரன் - 930 வாக்குகள்

2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 20398 வாக்குகள் - மகேந்திரன் - 1647 வாக்குகள்

3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 30329 வாக்குகள் - மகேந்திரன் - 2297 வாக்குகள்

4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 38806 வாக்குகள் - மகேந்திரன் - 2809 வாக்குகள்

5வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 49000 வாக்குகள் - மகேந்திரன் - 3713 வாக்குகள்

6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 58297 வாக்குகள் - மகேந்திரன் - 4349 வாக்குகள்

7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 67899 வாக்குகள் - மகேந்திரன் - 4876 வாக்குகள்

8வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 77309 வாக்குகள் - மகேந்திரன் - 5426 வாக்குகள்

9வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 87026 வாக்குகள் - மகேந்திரன் - 5941 வாக்குகள்

10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 98990 வாக்குகள் - மகேந்திரன் - 6278 வாக்குகள்

11வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 109653 வாக்குகள் - மகேந்திரன் - 6710 வாக்குகள்

12வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 118043 வாக்குகள் - மகேந்திரன் - 7215 வாக்குகள்

13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 126666 வாக்குகள் - மகேந்திரன் - 7765 வாக்குகள்

14வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 135517 வாக்குகள் - மகேந்திரன் - 8097 வாக்குகள்

15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 146247 வாக்குகள் - மகேந்திரன் - 8854 வாக்குகள்

16வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 155963 வாக்குகள் - மகேந்திரன் - 9420 வாக்குகள்

17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 160921 வாக்குகள் - மகேந்திரன் - 9669 வாக்குகள்

சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமிக்கு 3604 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

Monday, 29 June 2015

பறக்கும் ரெயிலை விட மெட்ரோ ரெயில் பாதுகாப்பானது: பொதுமக்களின் முதல் பயண திரில் அனுபவம்

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அனுபவம் பற்றி பயணிகள் கூறியதாவது:–பறக்கும் ரெயிலை விட மெட்ரோ ரெயில் பாதுகாப்பானது: பொதுமக்களின் முதல் பயண திரில் அனுபவம்
சரஸ்வதி (பரங்கிமலை):– மெட்ரோ ரெயில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை பயணம் செய்தது கிடையாது. இன்று முதல் முறையாக பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடும்பத்துடன் வந்தோம்.
ரெயில் நிலையமே பளிச்சென்று சொர்க்கலோகம் போல் காட்சியளிக்கிறது. ஏதோ வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. சென்னையில் பறக்கும் ரெயிலில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன்.
ஆனால் இந்த ரெயிலில் அதே போல் படிக்கட்டில் யாரும் நிற்க முடியாது. கதவுகள் மூடிக் கொள்வதால் பயணம் பாதுகாப்பாக இருக்கிறது. ரெயில் முழுவதும் சில்லென்று ஏ.சி. குளிர் இருப்பதால் பயணமே ஒரு திரில்லிங்காக இருக்கிறது.
ஜோன்னா (தி.நகர்):– முதல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது சரித்திரத்தில் இடம் பிடித்தது போல உள்ளது. இதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. பரங்கிமலை மீது நின்றால்தான் சென்னையின் அழகை பார்க்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போது மெட்ரோ ரெயிலில் சென்றாலே சென்னையின் அழகை ரசிக்கலாம்.
இந்த ரெயில் பயணம் ரொம்ப பாதுகாப்பானது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சிரமம் இல்லை. தலைவலி இல்லை. வெயில் தெரியாது. போக்குவரத்து நெரிசல் இல்லை. வெளிநாடுகளில் அப்படி இருக்கு, இப்படி இருக்கு என்று பெருமைப்பட்டு பேசுவோம். இப்போது அதை சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் மூலம் சொகுசாக அனுபவிக்கிறோம்.
கல்யாணி (மடிப்பாக்கம்):– நானும், எனது கணவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மெட்ரோ ரெயிலில் செல்கிறோம். முதல் நாளிலேயே மெட்ரோ ரெயிலில் சென்றது மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. இனி வடபழனி, கோயம்பேட்டுக்கு நாங்கள் மெட்ரோ ரெயிலிலேயே பயணம் செய்வோம்.
பூஜா (வடபழனி):– மிக உயரமான மேம்பாலத்தில் ரெயில் போகும்போது சென்னை நகரை பார்க்கும் அழகே தனி. அழகாக தெரிகிறது. கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் செல்லும் போது தாழ்வாக பறந்து விமானம் தொட்டு விடும் தூரத்தில் செல்வது போல் பார்க்க பிரம்மிப்பாக உள்ளது

ஹெல்மெட் சட்டத்தில் ஆவணம் பறிமுதல் அரசாணைக்கு தடை விதிக்க கோரி வழக்கு

சென்னை, ஜூன் 29–ஹெல்மெட் சட்டத்தில் ஆவணம் பறிமுதல் அரசாணைக்கு தடை விதிக்க கோரி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், கோபாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்டு, வருகிற ஜூலை 1–ந்தேதி முதல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்கள் ஆகியோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனடிப்படையில் கடந்த 18–ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில், 'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம், அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்வார்கள். ஆவணங்கள் இல்லாத வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்வார்கள். அந்த ஆவணங்களை காட்டிய பின்னர், போலீசாரிடம் சான்றிதழ் பெற்று சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு சென்று அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் புதிய ஹெல்மெட் வாங்கி, அதற்கான ரசீதை போலீசாரிடம் காட்ட வேண்டும் என்று கூறுவது தேவையில்லாத குழப்பத்தையும், சிரமத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும். மேலும், வாகனங்களில் ஆவணங்களையும் பறிமுதல் செய்வது என்பது சட்டவிரோதமாகும். எனவே, கடந்த 18-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

தந்தை தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கோரி மகன் மனு: கடலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை, ஜூன்.29–
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் என்.ராஜராஜன்.தந்தை தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கோரி மகன் மனு: கடலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
என் தந்தை மாதவன், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் ஒரு லாரியை வங்கியில் கடன் பெற்று வாங்கினார். இந்த லாரியை சிதம்பரம் மேலவீதியில் பழக்கடை வைத்திருக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் என் தந்தையின் நண்பர். இவர், இந்த லாரியை தனக்கு குத்தகைக்கு தரவேண்டும் என்றும் வங்கியில் செலுத்த வேண்டிய மாதத் தொகையை தானே செலுத்தி விடுவதாகவும், முன் பணம் ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறினார். இதன்படி ஏற்பட்ட வாய்மொழி ஒப்பந்தப்படி, அந்த லாரியை பாலகிருஷ்ணனுக்கு என் தந்தை வழங்கினார்.
ஆனால், அவர் சொன்ன படி தவணைத் தொகையை செலுத்தவில்லை. லாரியையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று என் தந்தை கூறியதும், அந்த லாரியை ‘பைசல் மகால்’ முன்பு நிறுத்தியுள்ளதாகவும், அதை எடுத்துக்கொள் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
அந்த லாரியை சென்று பார்த்தபோது, பேட்டரி, சக்கரம் உள்ளிட்டவைகள் முக்கிய பொருட்கள் இல்லை. அதேநேரம், என் தந்தை மீது சிதம்பரம் டவுண் போலீசில் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொய் புகார் செய்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், என் தந்தையை மிரட்டி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார்.
இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் என் தந்தையை, இன்ஸ்பெக்டர் ‘லாமேக்’ அழைத்து ரூ.1.50 லட்சத்தை பால கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். ஆனால், ரூ.90 ஆயிரத்தை பாலகிருஷ்ணன்தான் தனக்கு தர வேண்டும் என்று என் தந்தை கூறியதை இன்ஸ்பெக்டர் லாமேக் கேட்கவில்லை. பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்றும் மிரட்டினார்.
மேலும், தே.மு.தி.க. நிர்வாகி விஜயகுமார் மற்றும் அடியாட்களுடன் பாலகிருஷ்ணன் எங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டி தொந்தரவு செய்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த என் தந்தை, முதல்-அமைச்சர் தனிப்பரிவு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர், கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு என்று எல்லாருக்கும் கடிதத்தை எழுதி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் தன்னை சித்ரவதை செய்த இன்ஸ்பெக்டர் லாமேக் உட்பட பலர் மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதுகுறித்து சந்தேகச் சாவு என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு உள்ளதால், உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினால் நியாயமாக இருக்காது. என் தந்தை தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சிதம்பரம் டவுண் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
"

ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை இயக்கிய சென்னை பெண் பிரீத்தி


ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை இயக்கிய சென்னை பெண் பிரீத்தி
ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை இயக்கிய சென்னை பெண் பிரீத்தி
சென்னை, ஜூன் 29-

சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் முதல் கட்டமாக கோயம்பேடு–ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, சரியாக பகல் 12.16 மணிக்கு ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரீத்தி என்பவர் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ஏற்கனவே செய்துவந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான ஓட்டுனர் வேலைக்கு இவர் மனு செய்தார். அதிர்ஷ்டவசமாக இந்த பணிக்கான ஒரே பெண்ணாக பிரீத்தி தேர்வானார். 

பின்னர், இதற்கான தனிப் பயிற்சிகளை நிறைவு செய்து, சென்னையின் முதல் மெட்ரோ ரெயிலை இயக்கியவர் என்ற சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் பிரீத்தி, என்பது குறிப்படத்தக்கது.

Saturday, 27 June 2015

மெட்ரோ ரெயில் பணியின்போது பள்ளம் விழுந்த சாலையில் ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு

சென்னை, ஜூன் 28- 

சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே நடந்த மெட்ரோ ரெயில் பணியின்போது ஏற்கனவே ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து நேற்று ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள பூந்தமல்லி சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த வழியாக வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. 

நல்லவேளையாக கார் மெதுவாக வந்ததால் அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பள்ளத்தில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் அவசரமாக கலவை மற்றும் மணல் கொட்டியும், ராட்சத இரும்பு தகடுகள் பொருத்தியும் சரிசெய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து சீரானது. 

இந்தநிலையில், நேற்று பிற்பகலில் அதே இடத்தில் இரும்பு தகடு பொருத்தப்பட்ட பகுதியில் இருந்து ரசாயன கலவை கொப்பளித்து வெளியே வந்தது. சில நிமிடங்களில் சாலை முழுவதும் ரசாயன கலவை தேங்கியது. தொடர்ந்து ரசாயன கலவை வெளியேறிக் கொண்டு இருந்ததால் அந்த வழியாக சென்றவர்கள், அங்கிருந்த கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் நேற்று பிற்பகலில் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். 

பின்னர் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சாலையில் தேங்கி வழிந்தோடிய ரசாயன கலவையை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த இடத்தை சுற்றிலும் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி, எஞ்சிய பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து ரசாயன கலவையை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இதன் காரணமாக சென்டிரலில் இருந்து பாரிமுனை செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இந்த பள்ளத்தை நிரந்தமாக சீரமைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘நகரின் முக்கியமான பகுதி என்பதாலும், அரசு மருத்துவமனை அருகில் உள்ளதாலும் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவோடு இரவாக இந்த பள்ளம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது குறித்து சென்னை போலீசாரின் புதிய நிபந்தனைகள்


இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது தொடர்பாக சென்னை போலீசார் புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளனர்.

சென்னை மாநகர காவல்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தமிழக அரசு கடந்த 17-ந் தேதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், வருகிற 1-ந் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 206-ன் கீழ், வாகன ஓட்டியின் ஓட்டுநர் உரிமம் உள்பட இருசக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற புதிய ஹெல்மெட் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மேற்படி ஆவணங்கள் திரும்ப அளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன சட்டம் 1988-ல் கூறப்பட்டுள்ள ஹெல்மெட் அணிவது தொடர்பான விதிமுறைகளை வருகிற 1-ந் தேதி முதல் சென்னை காவல்துறை கடுமையாக அமல்படுத்த உள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம் ஓட்டும் நபரோ அல்லது பின்னால் அமர்ந்து செல்பவரோ தலைக்கவசம் அணியாமல் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

சென்னை ஐகோர்ட்டு கடந்த 8-ந் தேதி வழங்கியுள்ள ஆணையின்படியும், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 206-ன்படியும், இருசக்கர வாகன ஓட்டியின் அசல் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் மற்றும் இருசக்கர வாகனம் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள் அனைத்தும், உரிய ஒப்புகைக்கு பின், பறிமுதல் செய்யப்பட்டு, அனைத்து அசல் ஆவணங்களும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படும். ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்களின் நகல்கள் (ஜெராக்ஸ்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

இருசக்கர வாகனம் ஓட்டும் விதி மீறுபவர் மேற்கூறப்பட்ட அசல் ஆவணங்களை வைத்திருக்காத பட்சத்தில், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 207-ன்படி இருசக்கர வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்படும். இதற்கு உண்டான ஒப்புகை சீட்டு விதி மீறுபவருக்கு வழங்கப்படும். 

மேற்படி விதி மீறுபவர் அசல் ஆவணங்களை (ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ்) காவல் அதிகாரியால் அளிக்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்களைப் பெற்ற பின்னர், அதற்குண்டான ஒப்புகை சீட்டு அளிக்கப்பட்டு, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனம் விடுவிக்கப்பட்டு, மேற்படி அசல் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படும். 

மேலும், விதி மீறுபவர், ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற புதிய ஹெல்மெட்டையும், அதனை வாங்கியதற்கான ரசீதையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, மோட்டார் வாகன சட்டம் 1988-ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளின்படி தங்களது அசல் ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 

ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளின்போது, ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகளை தவிர்க்கும் பொதுநல நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் அனைவரும் தவறாமல் ஹெல்மெட் அணியுமாறு சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது. ஹெல்மெட் அணிவதனால் தங்களது விலை மதிப்பற்ற உயிரினை பாதுகாத்துக்கொள்வதுடன், தங்களது அசல் சான்றிதழ்கள் அல்லது வாகனங்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படுவதை தவிர்க்கலாம். 

நாம் இருசக்கர வாகனம் ஓட்டும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் தலைக்கவசம் அணிவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொள்வோம். சென்னை நகரினை வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பானதாக ஆக்கும் இந்த பணியில் பொதுமக்கள் தங்கள் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் அளிக்குமாறு சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மறைந்துபோன பழைய மணியார்டர் முறை: மின்னணு மூலம் பணம் அனுப்பும் புதிய வசதி

சென்னை, ஜூன்.28-        

தபால் துறையில் தகவல் தொழில்நுட்ப வசதி கொண்டுவரப்பட்டதால், 135 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மணியார்டர் அனுப்பும் பழைய முறை மறைந்து போய்விட்டது. விரைவான சேவைக்காக இணையதள உதவியுடன் ‘மணியார்டர்’ அனுப்பும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஏராளமான சேவைகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து சென்னை வட்ட தபால் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:-        

மணியார்டர் முறை முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறுவது தவறு. பழைய மணியார்டர் முறை தற்போது நிறுத்தப்பட்டு, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ‘இன்ஸ்டன்ட்’ மணியார்டர் முறை, ‘மொபைல்’ பண பரிமாற்றம், சர்வதேச பண பரிமாற்றம் என்பது உள்பட பல்வேறு சேவைகள் உள்ளன.         

இன்ஸ்டன்ட் மணியார்டர் முறையில் ரூ.1,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை அனுப்பலாம். இதற்காக கமிஷன் தொகையாக ரூ.100 முதல் ரூ.120 வரை எடுக்கப்படும்.  வாடிக்கையாளர் பணம் செலுத்தியதும், அவருக்கு 16 இலக்க எண் வழங்கப்படும். அதை அவர் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறாரோ அவரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் தபால் நிலையத்துக்கு சென்று அந்த நம்பரை அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் பதிவு செய்து அடையாள அட்டை நகலுடன் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.         

இதேபோல், மொபைல் பண பரிமாற்றத்தில் பணம் அனுப்ப வருபவர் பணத்தை பெறுபவரின் மொபைல் எண்ணை தர வேண்டும். பணத்தை செலுத்தியதும், ரகசிய எண் பணம் பெறுபவரின் மொபைலுக்கு சென்றுவிடும். பின்னர், அவர் அந்த ரகசிய எண்ணை தபால் நிலையத்துக்கு கொண்டுவந்து காண்பித்து, அடையாள அட்டை நகலை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை தான் அனுப்ப முடியும். கமிஷன் தொகையாக ரூ.45 முதல் ரூ.112 வரை எடுக்கப்படும். இந்த 2 சேவைகளிலும் பணம் அனுப்பிய ஒரு மணி நேரத்துக்குள்ளேயே உரியவருக்கு சென்றுவிடும்.        

மேலும் ‘மின்னணு வாணிபம்’ என்ற பார்சல் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் தற்போது ஆன்-லைன் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு அந்த நிறுவனம் எங்கள் மூலமாக பொருட்களை அதிகளவில் அனுப்பி வருகின்றனர். அதேபோல், ‘ஸ்பீடு போஸ்ட்’ முறையில் 2 தடவை டெலிவரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.        

‘மின்னணு வாணிபம்’ மூலம் ஏராளமான பார்சல்கள் அனுப்பப்பட்டு வருவதால் அதை கொண்டு செல்வதற்கு வசதியாக புதிய பைகள் வாங்க ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பைகளில் 15 கிலோ வரை பார்சல்களை சுமந்து செல்லலாம்.         இவ்வாறு அவர் கூறினார்.        

சென்னை அண்ணா சாலை மற்றும் ஜார்ஜ் டவுனில் உள்ள தபால் நிலையங்களில் ‘போஸ்ட் ஷாப்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பேப்பர், பேனா, பென்சில், கத்தரிக்கோல், ‘ஸ்டேப்ளர் பின்’ போன்ற எழுதுபொருட்களும், ‘பென்டிரைவ்’, செல்போன் போன்ற சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.        

காபி கப் மற்றும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகள் ஆகியவற்றின் படங்கள் அடங்கிய ஆல்பங்களும் விற்பனைக்காக உள்ளன. ஆனால் இங்கு வைக்கப்பட்டிருக்கும், பொருட்களின் விலை வெளிமார்க்கெட் விலையைவிட அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.        

இதுகுறித்து ராயப்பேட்டையை சேர்ந்த செண்பகவள்ளி கூறும்போது, ‘‘பென்டிரைவ் வெளி மார்க்கெட்டில் 4 ஜி.பி. ரூ.250 முதல் கிடைக்கிறது. ஆனால் இங்கு விலை ரூ.300. பெரும்பாலான பொருட்களின் நிலை இதுதான். எனவே வாடிக்கையாளர்கள் பார்ப்பதோடு சரி, யாரும் வாங்குவதில்லை. விலையை குறைக்க முன்வர வேண்டும்’’ என்றார்