Wednesday, 1 July 2015

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை மாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை, ஜூலை. 1–தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை மாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் மிக அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தமிழகத் தலைமைத்தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியிருக்கிறார். மேலும், சில கட்சிகள் ஆதாரமின்றி புகார் கூறியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். முறைகேடுகளை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி புகார் கூறியவர்களையே சக்சேனா விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆளுங்கட்சியினர் அப்பட்டமான விதிமீறல்களில் ஈடுபட்டனர். ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் இருந்து விட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இரவோடு இரவாக தொகுதி முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டன.
காலங்காலமாக கருப்பான கழிவு நீர் வந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தற்காலிக ஏற்பாடாக சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கழிவுநீர் குழாய்களும் மாற்றப்பட்டன. பொது மக்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்பட்டது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால், 4 ஆண்டுகளில் எதையும் செய்யாமல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் இதை செய்தது விதிமீறல் என்பது சக்சேனாவுக்கு தெரியாதா? இதை தடுக்க அவர் என்ன செய்தார்?
தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலம் மாநகரைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர் கணேசன் என்பவர் காலில் அடிபட்டதாகக் கூறி மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு தண்டையார்பேட்டையில் ஆளுங்கட்சிக்காக பரப்புரை மேற்கொண்டதை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக வெளியிட்டேன்.
அதைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே குற்றச்சாற்றை முன் வைத்தனர். இந்தக் குற்றச்சாற்றின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ன நடவடிக்கை எடுத்தார்? இதுதொடர்பாக சில செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, இது குறித்து யாரும் புகார் தரவில்லை என்று கூறினார்.
அப்படியானால், ஊடக செய்திகளின் அடிப்படையில் நீங்களாக முன்வந்து நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று கேட்டபோது, ‘‘நான் இன்று தொலைக்காட்சி பார்க்கவில்லை. அதனால் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று பதிலளித்துள்ளார்.
இப்படி பதில் கூறுவது பொறுப்பான அதிகாரிக்கு அழகா? காவல் அதிகாரி பிரச்சாரம் செய்தது குறித்து அதுவரை தெரியாவிட்டாலும், அதன்பின் விசாரித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது?
181 ஆவது வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வாக்குகள் பதிவாயின. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்த முறைகேடுகளுக்கு இது ஒரு உதாரணம் தான்.
எந்தெந்த வாக்குச்சாவடியில் இதே போல் முறைகேடுகள் நடந்தன என்பதை விசாரித்து அவை அனைத்திலும் மறு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்... இல்லாவிட்டால் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும்.
தேர்தல் பரப்புரை முடிவடைந்தவுடன் வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முகாமிட்டு முறைகேடுகளை அரங்கேற்றினார்கள். இதைத் தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருப்பாரா?
அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய சந்தீப் சக்சேனா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். இவரை வைத்துக்கொண்டு 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, சந்தீப் சக்சேனாவுக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் 

No comments:

Post a Comment