Thursday, 2 June 2016

தென்னை விவசாயிகளுக்கு சலுகைகள் கொப்பரைத் தேங்காய் நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக ஜெயலலிதா பெருமிதம்

சென்னை,
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக 20 மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வாக்குறுதிக்கான ஆலோசனைதமிழ்நாட்டில் சுமார் 4 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பரளவில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்திலும், சாகுபடி பரப்பில் மூன்றாமிடத்திலும் உள்ளது.
தற்போது சந்தையில் கொப்பரை தேங்காயின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக உள்ளதால், கொப்பரைத் தேங்காயை அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் அறிக்கையில் ‘கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற வாக்குறுதியை நான் அளித்திருந்தேன். தற்போது கொப்பரைத் தேங்காய் விலை குறைந்துள்ளதால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கான ஆய்வுக் கூட்டம் 2–ந்தேதி (நேற்று) எனது தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
அதிகாரிகள்இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.காமராஜ், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை செயலாளர் ச.விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நேரடி கொள்முதல் மையம்தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கொப்பரைத் தேங்காயை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்.
* இதன்படி, கொப்பரைத் தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்), வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் (ஏ.பி.சி.எம்.எஸ்.) மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (பி.ஏ.சி.சி.எஸ்.) மூலமாக நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கப்பட்டு, கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.
ஆதார விலை* அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு 59 ரூபாய் 50 காசு, பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு 62 ரூபாய் 40 காசு என்ற ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொப்பரைத் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
* இந்த கொள்முதலுக்குத் தேவையான 10 கோடி ரூபாய் நடைமுறை மூலதனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
* கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப அவர்களது வங்கிக்கணக்கில் மின்னணு நிதி பரிமாற்றம் (இ.சி.எஸ்.) மூலமாகவோ, கோடிட்ட காசோலை மூலமாகவோ உடனடியாக வழங்கப்படும்.
சந்தை கட்டணம் ரத்து* இந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காய்க்கு விவசாயிகளால் செலுத்தப்படவேண்டிய ஒரு சதவீத சந்தைக்கட்டணம் ரத்து செய்யப்படும்.
* தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் கேட்டுக்கொண்டபடி, கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைத் தேங்காயை விற்பனை செய்யும்போது மாநில அரசுக்கு செலுத்தப்படவேண்டிய 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
* இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் 15–ந்தேதி முதல் செயல்படும். கொப்பரைத் தேங்காய்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு கொள்முதல் செய்யப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தென்னை விவசாயிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

No comments:

Post a Comment