Monday, 21 December 2015

இப்போது தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 100 இடங்களை பிடிக்கும்: ஜி.கே.மணி சொல்கிறார்

விழுப்புரம், டிச. 20–இப்போது தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 100 இடங்களை பிடிக்கும்: ஜி.கே.மணி சொல்கிறார்
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பா.ம.க.வின் 8–வது கிழக்கு மண்டல மாநாடு மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இம்மாநாடு விழுப்புரம் பூத்தமேட்டில் வரும் 3–ந் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய இருமாவட்டங்களை ஒருங்கிணைந்து நடக்கிறது. ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் பூரணமதுவிலக்கு, லஞ்சம் ஊழலற்ற ஆட்சி, பாசனமேம்பாட்டுத்திட்டம், இலவச கல்வி, தேசிய சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது. பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வரைவுதேர்தல் வாக்குறுதிக்குப்பிறகு மக்கள் மனநிலை மாறிவருகிறது. அவரது தேர்தல் அறிக்கையை மக்கள் பேசிவருகிறார்கள். இன்று தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 80, 100 சீட்டுகளை பெறுவது உறுதி.
கனமழையால் சென்னை, காஞ்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இன்னும் நிவாரணப்பணிகளும், மீட்புபணிகளும் சரியாக நடக்கவில்லை. இதனை அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெள்ளநிவாரணப் பணிகள் கணக்கெடுப்பில் குளறுபடி நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காவிட்டால் பா.ம.க. முன்னின்று போராட்டத்தை நடத்தும்.
இளைஞர்கள், மாணவிகள், மாணவர்களை சீரழிக்கும் வண்ணம் பாடல்கள் இடம்பெறுகின்றன. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்போது நடிகர் ஒருவர் பாடியிருக்கும் பாட்டு தொடர்பாக கேட்டபோது, தமிழக அரசுதான் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் மதுரையில் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்

மதுரை, டிச. 20–அனுமதி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் மதுரையில் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் ஜனவரி 17–ந்தேதியும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்தன்றும், பாலமேடு ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்திலும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக வீர விளையாட்டுக்கு தடை ஏற்பட்டது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த மத்திய–மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு காளைகளை துன்புறுத்தக் கூடாத வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி உரிய உத்தரவை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர் களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
தடைபட்ட ஜல்லிக்கட்டு எப்படியாவது இந்த பொங்கல் தினத்தில் நடக் கும் என்ற நம்பிக்கை ஜல்லிக்கட்டு வீரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் 500–க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உரிய பயிற்சி கொடுத்து தயாராகி வருகிறது.

முடிச்சூர் அருகே மாநகர பஸ் படிக்கட்டு உடைந்து பள்ளி மாணவர்கள் காயம்

தாம்பரம், டிச. 21–முடிச்சூர் அருகே மாநகர பஸ் படிக்கட்டு உடைந்து பள்ளி மாணவர்கள் காயம்
மண்ணிவாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு தடம் எண் 55 மாநகர பஸ் இன்று காலை வந்து கொண்டு இருந்தது.
காலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
முடிச்சூர்– மணிமங்கலம் ரோடு பிரிவில் பஸ் வந்தது. சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் பஸ் குலுங்கி குலுங்கி சென்றது.
திடீர் என ஒரு பள்ளத்தில் பஸ் டமார் என்ற சத்தத்துடன் இறங்கி ஏறியது.
இதனால் ஏற்பட்ட அதிர்வில் பஸ்சின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. பஸ்சின் 2 படிகள் உடைந்து விழுந்ததால் அதில் நின்று பயணம் செய்த 15 பேர் ரோட்டில் உருண்டு விழுந்தனர்.
இதனை கவனிக்காமல் பஸ் சில அடி தூரம் சென்றது. இதனால் கீழே விழுந்தவர்கள் பஸ்சுடன் இழுத்து செல்லப்பட்டு உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிலரின் சட்டை பேண்ட் கிழிந்தது.
பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போடவே பஸ் நிறுத்தப்பட்டது. உடனே டிரைவர் கண்டக்டர் இறங்கி பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றிவிட்டு உடைந்த பஸ்சை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். மேலும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தாம்பரம் பள்ளியில் படிக்கும் பிளஸ்–2 மாணவன் பாரத், பார்த்திபன், விக்னேஷ் உள்பட சில மாணவர்களுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் கள்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.முடிச்சூர் அருகே மாநகர பஸ் படிக்கட்டு உடைந்து பள்ளி மாணவர்கள் காயம்

திருச்சியில் ரூ.1 கோடி நகை, பணத்துடன் பைனான்ஸ் அதிபர் குடும்பத்துடன் காரில் கடத்தல்

திருச்சி, டிச. 21–
திருச்சி உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவர் தனது வீட்டில் சொந்தமாக அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களது மகள் அன்பரசி. தம்பி அசோக்குமார்.
நேற்று மாலை அனைவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் நுழைந்தது. 7 பேரில் ஒருவர் போலீஸ் உடை அணிந்திருந்தார்.
அவர்களை கண்டதும் விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார். என்ன என்று அவர் விசாரிப்பதற்குள் அந்த கும்பல் திடீரென அவரை தாக்கியது. கத்தியாலும் அவரது உடலை கீறியதால் குடும்பத்தினர் நிலை குலைந்து போனார்கள்.
அதனை பயன்படுத்திய அந்த கும்பல் வீட்டில் இருந்த லாக்கரை திறந்து அதில் இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் மற்றும் ஆவணங்களை அள்ளியது. பிறகு கத்தி முனையில் மிரட்டி விஜயகுமார், பிரேமா, அன்பரசி, மற்றும் அசோக்குமார் ஆகியோரை அவர்களது சொகுசு காரிலேயே அந்த கும்பல் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கடத்தியது.
காருக்குள் 11 பேர் இருந்தனர். அப்போது காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு போலீஸ் உடை அணிந்த நபர் கூறினார். உடனே கார் மரக்கடை பகுதிக்கு வந்தது. முன்னால் சென்ற வாகனத்தை கார் கடக்க முடியாமல் இருந்த போது காரில் கடத்தி செல்லப்பட்ட விஜயகுமார் கதவை திறந்து காரில் இருந்து குதித்து தப்பினார். அவரது குடும்பத்தினரை அந்த கும்பல் கடத்தி சென்று விட்டது.
இதுபற்றி விஜயகுமார் உறையூர் போலீசில் உடனடியாக புகார் செய்தார். புகாரின் பேரில் அவரது குடும்பத்தினரை போலீசார் தேட தொடங்கினார்கள். இந்த நிலையில் கரூர் அருகே மாயனூர் அணை பகுதியில் விஜயகுமார் குடும்பத்தினரை விடுவித்த அந்த கும்பல் காரையும் அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
அவர்கள் கைப்பற்றிய நகை, பணம், ஆவணங்களை கொண்டு சென்றனர். தாங்கள் விடுவிக்கப்பட்ட தகவல் விஜயகுமாருக்கு தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்று போலீசார் உதவியுடன் குடும்பத்தினரை மீட்டார்.
கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அந்த 7 பேர் கொண்ட கும்பல் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அடிக்கடி விஜயகுமாரிடம் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
மேலும் அவர்களுக்குள் ரூ.10 லட்சம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நோயாளி போல சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி 3 கிலோ தங்கம் கடத்தி வந்த பெண் விமான நிலையத்தில் கைது

ஆலந்தூர், டிச.22-

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது மியான்மர் நாட்டைச் சேர்ந்த நூர்ஜகான் (வயது 54) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தார். இவர் விமானத்தில் இருந்து சக்கர நாற்காலியில் வந்தார்.

சிகிச்சைக்காக சென்னை வருபவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் அதிகமாக சோதனை செய்வதில்லை. ஆனால் நூர்ஜகானின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததால், சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். உடனே பெண் சுங்க இலாகா அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது நூர்ஜகான் ஆடைகளில் மறைத்து வைத்திருந்த 30 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். 3 கிலோ எடை கொண்ட இந்த தங்கக்கட்டிகள் ரூ.90 லட்சம் மதிப்புள்ளவை. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நூர்ஜகானை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர். சிகிச்சைக்காக வருபவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் அதிகமாக சோதனை செய்வதில்லை என்பதை அறிந்த கடத்தல் கும்பல், மியான்மர் பெண்ணை கடத்தலில் ஈடுபடுத்தியது தெரியவந்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருவது போல் நடித்து, நூதன முறையில் தங்கம் கடத்திய சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் நாளை செயல்படும் ஐகோர்ட்டு அறிவிப்பு

சென்னை,
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று ஒரு அறிவிக்கை வெளியிட்டார். அதில், ‘மிலாது நபி பண்டிகை வருகிற 23–ந் தேதி (புதன்கிழமை) என்று முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதால், 23–ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பண்டிகை வருகிற 24–ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 23–ந் தேதி (நாளை) வழக்கம்போல் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும். மிலாது நபி பண்டிகைக்காக 24–ந் தேதி அனைத்து நீதிமன்றங்களும் விடுமுறை விடப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி விபத்து: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி மனைவியுடன் பலி

அஞ்சுகிராமம், டிச.21-

கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்தவர் ஜோகேஷ் பி.பாட்டியா (வயது 32). குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.

இவருடைய மனைவி ஷாரிலா பீன் பாட்டியா (30). இவர்களுக்கு தானியா பாட்டியா (3) என்ற மகள் இருக்கிறாள். இந்தநிலையில் நேற்று பகல் கூடங்குளத்தில் இருந்து ஜோகேஷ் பி. பாட்டியா தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் ஷாரிலா பீன் பாட்டியா, மகள் தானியா பாட்டியாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டு பயணம் செய்தார்

ஜோகேஷ் பி.பாட்டியா மோட்டார் சைக்கிளில் மயிலாடி கூண்டு பாலம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது மயிலாடியில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி ஒரு டெம்போ சென்றது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் ஷாரிலா பீன் பாட்டியாவின் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே டெம்போவை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து படுகாயத்துடன் இருந்த ஜோகேஷ் பி.பாட்டியாவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜோகேஷ் பி.பாட்டியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் 3 வயது குழந்தை தானியா பாட்டியா படுகாயம் அடைந்தாள். அந்த குழந்தையை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்தார். சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபால் விசாரணை நடத்தி வருகிறார்.

சென்னையில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தா.பாண்டியன்

கோவை, டிச. 20–சென்னையில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், ஏ.ஐ.டி.யூ.சி. மாநாட்டின் வரவேற்பு குழு தலைவருமான தா.பாண்டியன் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
ஏ.ஐ.டி.யூ.சி.யின் அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த 15–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த மாநாடு வருகிற பிப்ரவரி 25 முதல் 28–ந்தேதி வரை கோவையில் நடைபெறும்.
இந்த மாநாட்டில் ஏ.ஐ. டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளசேதத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் உற்பத்தியை தொடங்கும் வகையில் அனைத்து உதவிகளையும் மத்திய – மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
கடந்த 100 ஆண்டுக்கு பிறகு சென்னை பேரழிவை சந்தித்துள்ளது. நிவாரண வேலைகளில் நிறை, குறை உண்டு. தமிழக அரசு இன்னும் திறம்பட செயல்பட்டிருக்கலாம். பல இடங்களில் தொலை தொடர்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காவல்துறையும் திறமையாக செயல்படவில்லை. பெரும்சேதத்துக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் பிளாஸ்டிக் கழிவுகள் தான். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக வகுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் உபயோகத்தை தமிழக அரசும், உற்பத்தியை மத்திய அரசும் தடை செய்ய வேண்டும். பனை ஓலைபொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும். புதிய நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் சென்னையிலும் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழக அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தா.பாண்டியன் கூறினார்

நெல்லிக்குப்பத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார்: பள்ளி முதல்வருக்கு சரமாரி அடி–உதை

நெல்லிக்குப்பம், டிச. 21–நெல்லிக்குப்பத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார்: பள்ளி முதல்வருக்கு சரமாரி அடி–உதை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் பட்டாம் பாலகத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நெய்வேலியை அடுத்த இருப்புக்குறிச்சியை சேர்ந்த இருதயராஜ் (வயது 32) என்பவர் பள்ளி முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அப்பள்ளியில் 10–ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை சரியாக படிக்கவில்லை என ஆபாசமாக பேசி கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் ஷேக் மிஸ்வானிடம் முறையிட்டார்.
இதனால் ஆவேசம் அடைந்த ஷேக் மிஸ்வான் மற்றும் ஜமால் முகமது, ஹாஜாபாய் உள்பட 20 பேர் நேற்று மாலை பள்ளிக்கு திபுதிபுவென வந்தனர். அங்கிருந்த பள்ளி முதல்வர் இருதயராஜிடம் மாணவியிடம் எப்படி ஆபாசமாக பேசலாம் என கூறி சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்து அவரை தரதரவென நடுரோட்டுக்கு இழுத்து வந்தனர். அங்கும் அவரை தாக்கினர். இதில், பள்ளி முதல்வர் அணிந்திருந்த உடைகள் கிழிந்து கந்தலானது. தலையிலும் ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த பள்ளி முதல்வரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

ஓமலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழுவதால் பக்தர்கள் பரவசம்

ஓமலூர், டிச. 21–
சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரிய மாரியம்மன்கோவில், சின்ன மாரியம்மன் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன.ஓமலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழுவதால் பக்தர்கள் பரவசம்
எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு உண்டு. அதற்கு காரணம் மார்கழி மாதங்களில் கோவில் கருவறையில் உள்ள மாரியம்மன் மீது காலையில் சூரிய ஒளிபடும். அப்போது பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். இந்த மாதம் முழுவதும் சூரிய ஒளி மாரியம்மன் சாமி மீது படுவதால் அதை பார்த்து தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இது போன்ற அம்சத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவில் கருவறைக்குள் சூரிய ஒளிபட்டு அம்மன் பிரகாசமாக காட்சி அளிக்கிறார். இதனை ஏராளமான பொதுமக்கள் காலையில் கோவிலுக்கு வந்து பார்த்து விட்டு அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். 

Saturday, 19 December 2015

ஏற்கனவே ஒட்டப்பட்ட ரேஷன் கார்டில் இருக்கும் உள்தாள் 2016-ம் ஆண்டுக்கும் செல்லும்; தமிழக அரசு உத்தரவு


சென்னை, 

ரேஷன் கார்டுகளில் ஏற்கனவே ஒட்டப்பட்ட உள்தாள் 2016-ம் ஆண்டுக்கும் செல்லும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ரேஷன் கார்டுகள்

தமிழகத்தில் 34 ஆயிரத்து 200 ரேஷன் கடைகள் உள்ளன. ஒரு கோடியே 99 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டும் 5 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்டு வந்தது. 

கடைசியாக 2005-ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இந்த கார்டுகள் 2009-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. அதன்பிறகு, புதிய கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு வந்தது. இப்படியே, 6 ஆண்டுகள் உள்தாள் ஒட்டப்பட்டது. 

உள்தாள் இணைப்பு

கடந்த ஆண்டு இறுதியில், ரேஷன் கார்டுகளில் 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும்போது, கூடுதலாக 2016-ம் ஆண்டுக்கான உள்தாளும் அதில் சேர்ந்தே இடம் பெற்றிருந்தது. எனவே, அந்த உள்தாளையே 2016-ம் ஆண்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- 

எலக்ட்ரானிக் கார்டு

தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை (ரேஷன் கார்டு) ஆதார் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு கணினி தொகுப்பினை அடிப்படையாக கொண்டு மின்னணு (எலக்ட்ரானிக்) குடும்ப அட்டையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பொதுவினியோகத் திட்டத்தினை முழு கணினி மயமாக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியினை 2015 டிசம்பர் மாதத்துக்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. 

மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு

இந்தப் பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதால், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

எனவே, தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீடிக்கவும், ஏற்கனவே குடும்ப அட்டையில் உள்ள உள்தாளை பயன்படுத்திக் கொள்ளவும் உரிய ஆணைகள் வெளியிடுமாறு அரசை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டது. 

இதை கவனமுடன் பரிசீலித்த பின்பு அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1-1-2016 முதல் 31-12-2016 வரை மேலும் ஓராண்டிற்கு நீடித்தும், இதற்காக தற்போது குடும்ப அட்டையில் காலியாக உள்ள உள்தாளினை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.