சென்னை: அனைவருக்கும் ஐ.ஐ.டி., திட்டத்தின் கீழ், சென்னை, ஐ.ஐ. டி.,யில், 'பி.எஸ்., டேட்டா சயின்ஸ்' படிப்பில் சேர, 28 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை, ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, அரசு பள்ளி மாணவர்களுக்கும், பணி செய்வோருக்கும், ஐ.ஐ.டி., வாயிலாக தொழில்நுட்ப கல்வியை பரவலாக்கும் வகையில், இணைய வழியில் பல்வேறு படிப்புகளை அறிமுகம் செய்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், 'பி.எஸ்., டேட்டா சயின்ஸ்' எனும், தரவு அறிவியல் படிப்பு வழங்கப்படுகிறது. இதில் இந்த ஆண்டு சேர, சென்னை 6; கோவை 8; கள்ளக்குறிச்சி 3; மயிலாடு துறை 1; சேலம், விழுப்புரம் தலா 2; சிவகங்கை, வேலுார் மாவட்டங்களில் தலா 3 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இதில், சிலர் தற்போது, பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்கள், அடுத்த ஆண்டு, இந்த படிப்பில் சேரலாம்.
அனைவருக்கும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன் திட்டம் குறித்து கூறுகையில், ''இத்திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு இல்லாமல், இளநிலை அறிவியல் பட்டப்படிப்பில் சேரலாம். கல்லுாரி மாணவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இது குறித்த தகவல்களை, https://study.iitm.ac.in/ மற்றும் https://study.iitm.ac.in/es இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்''. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment