Monday, 13 November 2017

புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், பூங்குன்றனிடம் வருமானவரி அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை: 500 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு

சசிகலா உறவினர் வீடுகளில் சோதனை நிறைவு; கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் தேடுதல் வேட்டை தொடர்கிறது
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திவந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. கோடநாட்டில் உள்ள கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் சோதனையை அதிகாரிகள் தொடர்கின்றனர். இதுதொடர்பாக 500-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி, வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் 1,800-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி அதிகாலை ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர். தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடகா, புதுச்சேரியிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீடு, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம், சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது உறவினர்கள் வீடு, அடையாறில் உள்ள ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் வீடு, மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவியின் சிஇஓ விவேக் ஜெயராமன் வீடு, கோடநாடு எஸ்டேட், கர்நாடக மாநில செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தியின் பெங்களூரு வீடு ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் சில இடங்களில் மட்டும் சோதனை முடிக்கப்பட்டன.

சோதனை நிறைவு

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் நேற்று 5-வது நாளாக தொடர்ந்த சோதனை ஒட்டுமொத்தமாக 100 மணி நேரத்துக்கு மேல் நீடித்துள்ளது. 2 பெண் அதிகாரிகள் உட்பட 5 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜெயா டிவியின் வரவு, செலவு விவரங்களும் பெறப்பட்டுள்ளன. முன்னதாக,டிவி நிர்வாகிகள் சிலரை தனியாக அழைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. போலி நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனை நடத்தப்பட்டதா என்பது தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மொத்தம் 3 வாகனங்களில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஜெயா டிவி அலுவலகத்தில் சிஇஓ விவேக்கின் அறைக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்பட்ட சோதனை முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள விவேக் வீடு, தி.நகரில் கிருஷ்ணபிரியா வீட்டிலும் நேற்று சோதனை நீடித்தது. நேற்று மதியத்துக்கு மேல் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.

தனி அறையில் விசாரணை

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் புகழேந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் சொத்துகள் வாங்கப்பட்டது மற்றும் அதற்கான தொகை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் நாளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவக்குமார் ஆஜரானார். சசிகலா சம்பந்தப்பட்ட 12 நிறுவனங்களில் அவர் முக்கிய அதிகாரியாக இருப்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தனர். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது நடந்த சில சம்பவங்கள் குறித்தும் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடமும் நீண்ட நேரம் விசாரணை நடந்தது. சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் தொடர்பாகவும் அவரிடம் கேட்கப் பட்டது.
தனி அறைகளில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சசிகலாவின் தம்பி திவாகரன் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அடுத்தடுத்து 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்க வருமானவரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment